தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 7243 நபர்களுக்கு செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மருத்துவத் துறையில் செவிலியர்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். வளர்ந்து வரும் மருத்துவப் பிரிவுகளில் தேவைக்கேற்ப தொற்றா நோய்களுக்கான சிகிச்சை, ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை மையங்கள், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுகள், 24 x 7 மணிநேர பிரசவ சேவை, மகப்பேறு மற்றும் குழந்தை நலப்பிரிவு, நோயுற்ற பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், மத்திய அரசின் இராஷ்டிரிய பால் ஸ்வஸ்திய கார்யக்கிரம் போன்ற பல திட்டங்களில் காலியாக உள்ள 7243 செவிலியர் பணியிடங்களை மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்திட தமிழ்நாடு அரசால் உத்தரவிடப்பட்டது.
அந்த ஆணைக்கிணங்க, காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து விண்ணப்பித்த 40,465 நபர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு 7243 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 7243 நபர்களுக்கு செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் / முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் தலைவர் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சிறப்புச் செயலாளர் டாக்டர் ப. செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சே. கீதாலட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் க. குழந்தைசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.








