அதன் விபரம்:
கவிஞர் வைரமுத்து: ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம், மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்து இருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில், தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று, வென்று காட்டியவர்; தன் போராட்டத்தை முடித்துக் கொண்டார். இவரது சாதனைகள், இன்னொரு பெண்ணால் எட்ட முடியாதவை. ஒரு கலையரசி, புவியரசி ஆக முடியும் என்றது, ஒரு சாதனை. ஒரு நட்சத்திரம், நிலவாக நீண்டது சாதனை. திராவிட இயக்கத்தின் ஒரு கிளையின் மீது பிராமணப் பெண்மணி பேராதிக்கம் செலுத்தியது, ஒரு சாதனை. கலையுலகில், 'அம்மு' என, அறியப்பட்டவர், அரசியலில், 'அம்மா' என விளிக்கப்பட்டது, ஒரு சாதனை.
நடிகர் சங்க தலைவர், நாசர்: ஒரு சகாப்தம்; சரித்திரம் நிறைவு பெற்றுள்ளது. ஒரு பெண் நினைத்தால், எந்தளவுக்கு முன்னேற முடியும் என்பதை ஜெயலலிதா நிரூபித்துள்ளார். எங்கள் மேல் தனிப்பட்ட அக்கறை கொண்டவர். தன் சொந்த வாழ்க்கையை, கலைக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்தார். எங்கள் முன்னோடியான அவரது வழியில், நாங்கள் நடப்போம்.
இயக்குனர் பாரதிராஜா: அரசியலில் எந்த பின்புலமும் இன்றி, அரசியல் வாரிசும் இன்றி, தமிழகத்தின் வெற்றி முதல்வராக இருந்துள்ளார். அவரது இழப்பு, உலக தமிழர்களுக்கு பேரிழப்பு.இயக்குனர் வாசு: தாயை இழந்த போது நான் பட்ட அதே வேதனை, இப்போது ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
வையாபுரி: அவரை இந்நிலையில் பார்க்கும் போது, எனக்கு நெஞ்சு வலிக்கிறது. அவர் எங்களை விட்டு பிரிந்தாலும், அவரது ஆன்மா எங்களுடனேயே இருக்கும்.
கவுதமி: இன்றைய மற்றும் அடுத்த தலைமுறைக்கு, நல்ல உதாரணமாக இருந்தவர். இந்தியாவின் சிறந்த தலைவராக விளங்கியவர்.
ஒய்.ஜி.மகேந்திரன்: நான் பார்த்த, படித்த சரித்திரத்தில், மூன்று பேர் இரும்பு மங்கை; அதில், இவரும் ஒருவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.








