இனி எஸ்எம்எஸ் மூலமும் ஆதார் எண் - பான் எண்ணை இணைக்கலாம் !!
குறுஞ்செய்தி வாயிலாகவும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறையை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்க 567678 அல்லது 56161 என்ற
எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். அதன்மூலம் இரு எண்களும்
இணைக்கப்படும். இதுகுறித்த வழிமுறைகள் தேசிய நாளிதழ்களில் விளம்பரங்களாக
வெளியாகியுள்ளன. இணைய வசதி அறிமுகம்
முன்னதாக இணையத்தில் ஆதார் எண்ணையும் - பான் எண்ணையும் இணைப்பதற்கான வசதியை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தி இருந்தது.
இந்தப் பக்கத்தை தொடர்பு கொண்டு பயனாளர்கள் தங்கள் ஆதார் எண்ணையும், பான்
எண்ணையும் இணைத்துக் கொள்ள முடியும். ஏற்கெனவே 1.22 கோடி பேர் ஆதார்
எண்ணோடு பான் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தம் 25 கோடி மக்கள் இந்தியாவில்
பான் எண் வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 111 கோடி பேர் இந்தியாவில் ஆதார் அட்டை
வைத்துள்ளனர். வருமான வரித்துறை தகவலின்படி 6 கோடி பேர் தற்போது வருமான
வரி தாக்கல் செய்துள்ளனர்.
நிதி மசோதா 2017-18ன் படி வருமான வரித் தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம்
என்று கூறப்பட்டது. மேலும் ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைக்க வேண்டும்
என்று கூறப்பட்டுள்ளது. ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைப்பதற்கான
வசதியை மே மாதத்தின் ஆரம்பத்தில் வருமான வரித்துறை அறிமுகம் செய்தது. ஆதார்
எண், பான் எண் ஆகிய இரண்டிலும் ஒரே மாதிரியான விவரங்கள் இருக்க வேண்டும்.
ஒரே மாதிரியான விவரங்கள் உள்ளனவா என்பதை தனிநபர் அடையாள ஆணைய விவரங்களோடு
சரிபார்க்கப்படும். சரிபார்ப்புக்குப் பிறகு ஆதார் எண்ணையும் பான்
எண்ணையும் இணைப்பது முடிவடையும். ஒருவேளை விவரங்கள் பொருந்த வில்லையென்றால்
ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைத் தேர்வு செய்து அதை மொபைல் மூலம்
உறுதி செய்துகொள்ள முடியும். மேலும், ஜூலை 1, 2017-ல் இருந்து பான்
எண்ணுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.