நாடாளுமன்றத்துக்கும், மாநில
சட்டசபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் நாட்டுக்கு பெரும்
நிதிச்சுமை ஏற்படுகிறது. இதேபோன்று தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்களை
ஈடுபடுத்துவதால் வழக்கமான பணிகள் பாதிக்கின்றன.
இதன் காரணமாக நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தலுடன் சேர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், அரியானா, மத்திய பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், டெல்லி, காஷ்மீர், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய 19 மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என சிபாரிசு செய்து மத்திய சட்ட கமிஷன் வரைவு அறிக்கை ஒன்றை தயார் செய்து கொண்டு இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
எஞ்சிய கர்நாடகம், மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, கோவா, குஜராத், இமாசல பிரதேசம், பஞ்சாப், திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய 12 மாநிலங்களுக்கு 2024-ம் ஆண்டு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடத்தலாம் எனவும் பரிந்துரை செய்து அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
2024-ம் ஆண்டு தேர்தல் நடத்தலாம் என பரிந்துரைக்கப்படுகிற மாநிலங்களில் சிலவற்றின் ஆயுள்காலத்தை நீட்டிக்க வேண்டிய நிலை வரலாம். எனவே இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்த வேண்டிய தேவை எழும்.
இது சாத்தியம் இல்லை என்கிற பட்சத்தில், 19 மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்த 30 மாதங்களுக்கு பிறகு இந்த 12 மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தலாம் எனவும் பரிந்துரை செய்து அறிக்கை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி வரும் 17-ந் தேதி சட்ட கமிஷன் விவாதிக்க உள்ளது.
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால், அரசியல் சாசனத்தில் 5 திருத்தங்கள் செய்ய வேண்டியது வரும் என கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் கமிஷன் கூறி இருப்பது நினைவுகூரத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...