பயனர்களுக்கு வாட்ஸ் அப் விடுத்த எச்சரிக்கை! வாட்ஸ் செயலியில்
அனுப்பப்படும் குறுஞ்செய்திகளின் பாதுகாப்பு குறித்து வாட்ஸ் அப் நிறுவனம்
அதன் பயனர்களுக்குப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இந்தச் சேவை குறித்து தற்போது வாட்ஸ் அப் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள
பதிவில், "கூகுள் டிரைவில் சேமித்து வைக்கப்படும் வாட்ஸ் அப்பின் மீடியா
மற்றும் மெசேஜ்கள், இனி end-to-end encryption செய்யப்பட மாட்டாது" என்று
தெரிவித்துள்ளது. அதாவது கூகுள் டிரைவில் சேமித்து வைக்கப்படும் எந்தவொரு
பதிவுக்கும் இனி பாதுகாப்பு இல்லை என்பதே இதன் பொருளாகும். வாட்ஸ் அப்
நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பயனர்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்பின் இந்த அறிவிப்பு குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் சாய்
கிருஷ்ணா கொத்தப்பள்ளி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,
"வாட்ஸ் அப்பின் மெசேஜ்களை கூகுள் டிரைவில் சேமித்து வைப்பது என்பது
பயனர்களாகிய உங்களுடைய விருப்பம்தான். வாட்ஸ் அப் இதனைக்
கட்டாயப்படுத்தவில்லை. இது ஒரு புதிய அம்சம் அவ்வளவுதான். கூகுள்
நிறுவனத்தின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதனை நீங்கள்
பயன்படுத்தலாம். தேவையில்லை என்று விரும்பினால் அதனைத் தவிர்த்து விடலாம்"
என்று தெரிவித்துள்ளார்.
End-To-End Encryption என்றால் என்ன?
வாட்ஸ் அப்பில் பயனர்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்களும் End-To-End
Encryption செய்யப்பட்டே அனுப்புநருக்கு அனுப்பப்படும். அதாவது நாம்
அனுப்பும் மெசேஜ்கள் அனைத்தும் ஒரு சிப் வடிவிற்கு மாற்றப்பட்டு லாக்
செய்யப்பட்டு போனிலிருந்து நம் சர்வருக்கு அனுப்பப்படும். பின்னர் லாக்
செய்யப்பட்ட அந்த சிப்பானது, பெறுநரின் சர்வரை அடைந்து, அவர்களின் போனைச்
சென்றடையும் வரை யாராலும் அந்த மெசேஜை படிக்கவோ, மாற்றம் செய்யவோ முடியாது.
இதுவே End-To-End Encryption வசதியின் முக்கிய சிறப்பம்சமாகும். இந்த
விதிமுறை வாட்ஸ் அப் நிறுவனத்துக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது