குழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டும்,
தவறு செய்யும் குழந்தைகளை கடுமையான முறையில் கண்டிக்க வேண்டும் என்பது
தவறான வழிமுறை. குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற
முறையில், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
அவர்களிடம் கடுமையாகப் பேசுவது, அவர்கள் செய்யும் எல்லா செயல்களையும்
சந்தேகக் கண்ணோடு பார்ப்பது, மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசுவது, எல்லா
செயல்களிலும் குறைகளை மட்டுமே கண்டுபிடித்து திட்டுவது போன்ற
நடவடிக்கைகளால் எந்த பயனும் இல்லை. இது குழந்தைகளுக்கும் நன்மை தராது;
பெற்றோருக்கும் நன்மை தராது.
தொடர்ச்சியாக குழந்தைகளை குறை சொல்லிக் கொண்டும், திட்டிக் கொண்டுமே
இருந்தால் அந்தக் குழந்தைக்குத் தாழ்வுமனப்பான்மை அதிகரிக்கும். அந்த
தாழ்வு மனப்பான்மையால் வெளியிடங்களில் மற்றவர்களோடு பழகுவதிலும், நடந்து
கொள்ளும்விதங்களிலும் பெரிய பாதிப்பு ஏற்படும். தன்னம்பிக்கை குறைந்து,
அந்தக் குழந்தையின் சமூக வாழ்க்கையே கேள்விக்குறியாகும் அளவு சூழல்
உருவாகும்.
பெற்றோர் இதுபோல் அதிக கடுமையோடு நடந்துகொள்வதால் குழந்தைகளின் மனநிலை
பாதிக்கப்பட்டு, அவர்கள் தகாத செயல்களைச் செய்யவும் வாய்ப்பு உருவாகும்.
இதன் எதிரொலியாக கல்வியில் ஈடுபாடு குறைந்து, அதில் பின்னடைவு ஏற்படுகிறது.
எதையும் கேள்வி கேட்பது, தனக்கு எல்லாம் தெரியும், தான் நினைத்தது சரியாக
இருக்கும் என்ற மனநிலை குழந்தைகளின் வளரிளம் பருவத்தில் இயல்பாகவே
இருக்கும்.
அந்த நேரத்தில் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதால் தங்களுடைய சக வயது
குழந்தைகளிடமும் அதே கடுமையான உணர்வினை பிரதிபலிப்பார்கள். அதுமட்டுமல்ல;
தான் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அவர்கள் அதேபோன்ற
கடுமையான நடவடிக்கைகளையே கையாள்கிறார்கள். இப்படியே வளரும் குழந்தைகளின்
வளர் இளம் பருவத்தில் அவர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, தான்
தவறானவன்தான் என்று மற்றவர்கள் மத்தியில் தைரியமாக உரக்கச் சொல்லும் நிலை
உண்டாகி விடும்.
இதுபோன்ற மனநிலை குழந்தைகளிடம் உருவாகிவிடாமல், சரியான முறையில் குழந்தைகளை
அணுகி மாற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. குழந்தைகளுக்கு
அவர்களுடைய பெற்றோர்தான் முதல் நாயகர்கள். பெற்றோருடைய நடவடிக்கைகள்
மற்றும் அவர்கள் அமைத்து கொடுக்கும் சூழலில் இருந்தே குழந்தைகள் பல புதிய
விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தைகளின் குறைகளைச் சுட்டிக் காட்டும் முன்னர் அவர்கள் செய்கிற நல்ல
விஷயங்களை முதலில் பாராட்டும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மனதாரப்
பாராட்டுவதன் மூலம் குழந்தைகளுடைய மனநிலை மகிழ்ச்சியுடனும்,
உற்சாகத்துடனும் இருக்கும்.
குழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர்,
அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள
வேண்டியது மிகவும் அவசியம்.
‘இந்த விஷயத்தை செய்யாதே’ என்று உத்தரவு போடுவதைவிட, அந்தச் செயல் ஏன்
தவறானது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இதையெல்லாம் உனக்கு
சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று தப்பிப்பது ஆரோக்கியமான அணுகுமுறை
அல்ல.
குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவையான கல்வி, விளையாட்டு போன்ற
பலவற்றையும் உருவாக்கிக் கொடுப்பதோடு நற்பண்புகள் நிறைந்த நல்ல மனிதனாக
வளர்க்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. எனவே,
குழந்தைகளின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...