பொதுத்தேர்வு மற்றும் அரசுப் போட்டி தேர்வு அறைகளுக்கு சர்க்கரை நோய்
பாதித்த மாணவர்கள் இன்சுலின், பரிசோதனைக் கருவிகளை எடுத்துச் செல்ல
அனுமதிக்க கோரிய வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவ, இஎஸ்ஐ மருத்துவர், அரசு
மருத்துவமனை சர்க்கரை நோய் மருத்துவர் ஆகியோர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற
மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த கேசவன் தாக்கல் செய்த மனு: இந்தியாவில் சர்க்கரை நோயால்
பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு
லட்சம் சிறுவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோயால்
பாதிக்கப்பட்ட சிறுவர்கள், சரியான நேரத்தில் உணவு விகிதத்தை கடைபிடித்து,
இன்சுலின் மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் பாதித்த
மாணவர்கள் சர்க்கரை நோய் பரிசோதனைக் கருவி, பரிசோதனைப் பட்டை, மாத்திரைகள்,
சாக்லேட், பழங்கள், இன்சுலின் போன்றவற்றை பொதுதேர்வு அறைக்குள் எடுத்துச்
செல்ல அனுமதி மறுக்கின்றனர். இதனால் சர்க்கரை அளவு குறையும் போதோ அல்லது
கூடும் போதோ மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. சர்க்கரை
நோயினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அரசு போட்டித் தேர்வு, நீட் தேர்வு
உள்ளிட்ட தேர்வுகளுக்கு மருத்துவ உபகரணங்கள் எடுத்துச் செல்ல
அனுமதிப்பதில்லை. இவ்வாறு மறுப்பது இந்திய உரிமையியல் சட்டம் 14 மற்றும் 21
-க்கு எதிரானது. இந்நிலையில், 2017 இல் பொதுத்தேர்வு அறைக்கு சர்க்கரை
நோய்க்கு உதவும் பொருள்களை எடுத்துச் செல்லலாம், தேர்வு சமயத்தில் சிறுநீர்
கழிக்கச் செல்லலாம் என்ற நிபந்தனைகளுடன் சிபிஎஸ்இ சுற்றறிக்கை
அனுப்பியது. எனவே பொதுத்தேர்வு, போட்டித் தேர்வு அறைகளுக்குள், சர்க்கரை
நோய் பாதித்த மாணவர்கள், இன்சுலின் பென், சோதனைக் கருவிகளை எடுத்துச்
செல்ல அனுமதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சர்க்கரை நோய்
பாதிப்பால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வு அறைக்கு பரிசோதனைப் பட்டை,
மாத்திரைகள், சாக்லேட், பழங்கள், இன்சுலின் போன்றவற்றை எடுத்துச் செல்ல
சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ, இஎஸ்ஐ மருத்துவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சர்க்கரை நோய் பிரிவு தலைமை மருத்துவர் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...