’பார்த்து நட’ என்ற வார்த்தையைச் சர்க்கரை குறைபாடு உள்ளவர்களைப் பார்த்து, அவர்களது நலம் விரும்பிகள் சொல்வது சகஜம். அதே நேரத்தில், சர்க்கரை குறைபாட்டின் தீவிரத்தன்மையைக் குறைக்கப் பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளுள் நடை பயிற்சியும் உண்டு என்பது புன்னகைக்க வைக்கும் முரண். சர்க்கரை குறைபாட்டால் பாதிப்புகளை எதிர்கொள்ளும்போது கண்கள், இதயம், சிறுநீரகங்கள், தசைகள், நரம்புகள் என்று உடலின் பல பகுதிகளிலும் தாக்கம் ஏற்படும். குறிப்பாக, நமது பாதங்களில் உள்ள தோல் மென்மையாகி உலர்ந்து விடும்.
இதன் தொடர்ச்சியாக நரம்புகள் உணரும் தன்மையை இழந்து வலி தெரியாத நிலை ஏற்படும். காலில் ரத்த ஓட்டம் குறைவதால் உணரும் திறன் குறையும். இதனால், காயம் ஏற்பட்டால் கூட ஒருவரால் உணர இயலாது. அது மட்டுமல்லாமல் ரத்த ஓட்டம் குறைவதால் காலில் ஏற்படும் புண்கள் எளிதில் ஆறாது.
மாறாக, கை அல்லது உடலின் வேறு பாகங்களில் காயம் ஏற்பட்டால் இந்த நிலைமை ஏற்படுவதில்லை. காயம் கண்ணுக்குத் தெரியும் நிலையில், நோயாளி தன்னிலை உணர வாய்ப்புண்டு. இதனாலேயே சர்க்கரையால் பாதிப்பு ஏற்படும்போது பாதங்களைப் பராமரிப்பதென்பது கட்டாயம் ஆகிப் போகிறது.
ஒரு சிலருக்கு உடலில் சர்க்கரை அளவு மாறி மாறி இருக்கும்போது பாதங்களில் நமநமப்பு இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். அலோபதி மருத்துவர்கள் இதற்காக எச்.பி.ஏ.1சி என்ற ரத்தப் பரிசோதனையைப் பரிந்துரைக்கின்றனர். இதன் மூலமாக, மூன்று மாத காலமாக உடலில் சர்க்கரை அளவு எவ்வாறாக இருந்து வருகிறது என்பதை அறிய முடியும். உடலின் எடையைக் குறைக்க, பி.எம்.ஐ. எண் 25 வருமாறு பார்த்துக் கொள்வதும் அவசியம்.
முதியவர்கள் பலர் அதிக உடல் எடை காரணமாக முதுகெலும்பு தேய்வு, தண்டுவடப் பிரச்சனை, கை கால் எலும்புகளில் தேய்மானம் போன்றவற்றை எதிர்கொள்வர். இதனால் கால் விரல்கள், பாதங்களில் வலி ஏற்படலாம். இதனைத் தவிர்க்கத் தகுந்த பயிற்சிகள் என்னவென்று மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
கால்களைச் சரியாகப் பராமரிப்பதன் மூலமாக நோய்த் தொற்றுகளில் இருந்து விடுபடலாம் என்பதனை மேற்கத்திய நாகரிகம் பரிந்துரைக்கிறது. சேறு, தூசு, காயம் ஏற்படுத்தும் பொருட்களில் இருந்து கால்களைக் காப்பதென்பது அடிப்படையான விஷயம். சர்க்கரை குறைபாடு உடையவர்கள் இதனைப் பால பாடமாகப் பின்பற்ற வேண்டும்.
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல், சரியான உணவுக் கட்டுப்பாடு, போதுமான அளவு உடற்பயிற்சிகள் போன்றவற்றால் சர்க்கரை குறைபாட்டைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நடை பயிற்சி மற்றும் இலகுவான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது வலியை உணர்ந்தால் பிசியோதெரபிஸ்ட்டை அணுகலாம். இதன் மூலமாக, உடலின் திறனுக்கு ஏற்றவாறு நடைபயிற்சி மேற்கொள்ள வழி உண்டாகும்.
சர்க்கரை குறைபாடு இருக்கிறது என்பது தெரிந்தவுடன் ஒருவரது முகம் அதிர்ச்சியில் சுருங்குவதைவிட, கால்கள் தளர்ச்சியைச் சந்திப்பதே அதிகம். அதனை விடுத்து, கால் பராமரிப்பில் கவனம் கொள்வது சாலச் சிறந்த பயன்களை அள்ளித் தரும்.









