தமிழ்நாடு நாள்.
1 நவம்பர் 1956-இல் இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் நிறுவப்பட்டன.
சென்னை மாகாணத்தை மொழிவாரியாகப் பிரித்த நாளான... நவம்பர் 1 ஆம் தேதியை, தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதற்கான அரசாணையை, தமிழ்நாடு அரசு 25 அக்டோபர் 2019 அன்று வெளியிட்டது.
"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறு
நல்லுலகம்"
என்று தொல்காப்பியர் தமிழகத்தின் நிலஎல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
மொழிவழித் தமிழகம் பிறந்த நாள்
1.11.1956
இதன்பின்னியில் பல தியாகங்களும், இழந்த நிலங்களும் உண்டு.
#தமிழ்நாடு எல்லைப்போராட்ட வரலாறு.
1895இல் மொழிவழி மாகாணம் கேட்டு முதன்முதலில் போராடியவர்கள் ஒரியர்கள். ஒரிய தேசத் தந்தை மதுசூதன் தாஸ் தலைமையில் அவர்கள் போராடி 1935இல் ஒரிசா என்ற பெயரில் தனி மாகாணம் கண்டனர். அதுபோலவே 1906 முதல் தனி மராத்திய கோரிக்கையும் வலுப்பெற்றது.
1919இல் இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டு வந்த திலகரும் கூட தனி மராத்திய கோரிக்கையையும் சேர்த்தே எழுப்பி வந்தார். காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி இயங்கிய போது மொழிவழி மாகாண கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்தது.
1921இல் மொழிவழி அடிப்படையில் காங்கிரஸ் கட்சி மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்படுவதோடு அதற்கு சுயாட்சியும் வழங்க வேண்டும் என்று 1924இல் பெல்காமில் கூடிய காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.
சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி பிரதேசங்கள் ஒன்றாக இயங்கி வந்த போது 1915 இலிருந்து ஆந்திரர்கள் தான் முதன் முதலில் தனி மாகாணம் கேட்கத் தொடங்கினர்.
1921இல் தனி ஆந்திர காங்கிரஸ் கட்சி பிரிக்கப்பட்ட பின்னர் எல்லைச் சிக்கல் ஏற்பட்டது. திருப்பதிக்கு தெற்கே உள்ள தமிழகப் பகுதிகள் தங்களுக்கே சொந்தம் என்று ஆந்திரர்கள் வாதிட்டனர்.
திருப்பதி, திருத்தணி, சித்தூர் ஆகிய. மூன்று தாலுக்காக்களையும் தமிழ்நாடு காங்கிரசில் சேர்க்கப்பட வேண்டுமென்று சத்திய மூர்த்தி ஐயர் கோரினார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆந்திர காங்கிரசுக்கு மேற்படி தாலூக்காக்கள் தாரை வார்க்கப்பட்டது.
1926இல் மத்திய சட்டப்பேரவையில் சி.சங்கரன் நாயர் என்பவர் சென்னை மாகாணத்திலுள்ள தமிழ் பேசும் பத்து மாவட்டங்களை தனியாகப் பிரித்து சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
1937இல் இராசாசி அரசு பள்ளிகளில் இந்தி திணிப்பை மேற்கண்ட போது தமிழ்நாடு தனி மாகாண கோரிக்கையை தமிழறிஞர்கள் எழுப்பினர். இந்தி திணிப்பிற்கு எதிராக பெரியாரும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். போராட்டம் தீவீரமடைந்த நிலையில் "தமிழ்நாடு தமிழருக்கே" முழக்கம் பிறந்தது.
நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில், "பன்மைத்தன்மை பிளவை வளர்க்கிறது. ஒருவரைத்
தமிழராகவோ
மகாராஷ்டிரராகவோ
வங்காளியாகவோ பார்ப்பது நாட்டின் வல்லமையைக் குழிதோண்டி புதைக்கும். நாம் அனைவரும் இந்துக்கள்; ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்பதே நம் கொள்கையாக அமைய வேண்டும்" என்று செல்லும் இடங்களில் எல்லாம் மொழி வழி மாநிலங்கள் பிரிப்பதற்கு எதிராக வெளிப்படையாகவே முழங்கினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர்.
#இந்திய விடுதலைக்கு பின்னர் வடக்குஎல்லை போராட்டம்.
1911இல் பிரித்தானியர் நிர்வாக வசதிக்காக வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து சித்தூரை தனியாகப் பிரித்தெடுத்தனர். இருமொழிப்பகுதிகளாக இருந்த சித்தூர் தெலுங்கரின் ஆதிக்கத்தால் மெல்ல மெல்ல தெலுங்குப்பகுதிகளாக மாற்றப்பட்டன.
1912இல் தெலுங்கர்களால் தொடங்கப்பட்ட 'விசாலா ஆந்திரா' கோரிக்கை 1953இல் நீறுபூத்த நெருப்பாகியது. 'மதராஸ் மனதே' என்று பொட்டி சிறிராமுலு உண்ணாநிலைப் போர் நடத்தி மடிந்தார். அவரின் மரணம் தெலுங்கர்களை விழிக்க வைத்தது. பிரதமர் நேருவையோ குலைநடுங்க வைத்தது. உடனே ஆந்திரம் "இன்று முதல் தனிமாநிலமாக இயங்கும்" என்று நேரு அறிவித்தார்.
மொழி வாரி ஆணையம், சர்தார் கே.எம்.பனிக்கர் தலைமையிலே மத்திய அரசு அமைத்த ஆணையம் சித்தூர் மாவட்டம் முழுவதையுமே ஆந்திராவிற்கு கொடுத்துவிட்டது. வேறு வழியில்லாமல் எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட காலகட்டத்தில் ம.பொ.சி மட்டும் அதை ஏற்கவில்லை.
அவர் மட்டும் புதிய தமிழகம் படைத்திட தமிழர்களுக்கு அறைகூவல் விடுத்தது.
அவர் தான் மொழிவழி மாகாண கிளர்ச்சி வேண்டி 1946 முதலே 'தமிழ்முரசு' ஏட்டில் எழுதி வந்தார். காங்கிரசில் இருந்து போராடி தோற்ற நிலையில் 'தமிழரசு கழகம்' எனும் அமைப்பை கட்சிக்குள் நிறுவினார். 15.8.1947இல் இந்தியா ஆங்கில ஏகாதிபத்தியத்தியத்திடமிருந்து விடுதலை பெற்றதும், " போர் முடிய வில்லை, போர் முனை தான் மாறுகிறது" என்று முரசறைந்தார்.
மறுநாள் 16.8.1947இல் திருப்பதி நோக்கி பனிரெண்டு தோழர்களோடு புறப்பட்டார். அவருக்கு சிறந்த தமிழறிஞராகிய மங்கலங்கிழார் துணை நின்றார். வடக்கெல்லைப் போராட்டப் போராளிகள் திருவாலங்காடு, கனகம்மா சத்திரம், திருத்தணி போன்ற ஊர்களில் 'வேங்கடம் வரை தமிழருக்கே உரிமை' என்பதைப் பொதுக்கூட்டம் மூலம் மக்களிடம் எடுத்துரைத்தனர். தெலுங்கர்களின் கடும் எதிர்ப்பிற்கிடையில், திருப்பதிக்கே சென்று வேங்கடத்தை மீட்டெடுப்போம் என்று உரத்த குரலில் முழங்கினர்.
தெலுங்கரின் 'மதராஸ் மனதே' முழக்கத்திற்கு பதிலடியாக, "தலையை கொடுத்தேனும் தலைநகர் காப்போம்" என்று முழங்கவும் ம.பொ.சி. தயங்க வில்லை. அவரின் போராட்டத்திற்கு அன்றைய முதல்வர் இராசாசி துணை நின்றார். சென்னை தமிழர் வசமானது. அதற்கு ஈடாக வடவேங்கடம், திருத்தணிகை பறிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழர்கள் சத்தியாகிரகம், பொதுவேலை நிறுத்தம், இரயில் மறியல் என்று தொடர்ந்து வடக்கெல்லையில் போராட்டம் நடத்தினர். 18.5.1953இல் புத்தூரில் நடந்த எல்லைப்பாதுகாப்பு கூட்டத்தில் தெலுங்கர்கள் புகுந்து கற்களை வீசினர். அதில் கலந்து கொண்ட ம.பொ.சி. அவர்கள் நல்ல வேளையாக உயிர் தப்பினார்.
அதன் பிறகு 3.7.1953 இல் திருத்தணிகையில் போராட்டம் நடத்திய ம.பொ.சி. கைது செய்யப்பட்டார். இராசாசி அரசு ஆறுவார காலம் சிறைத் தண்டனை வழங்கியது.
போராட்டம் தீவிரமடைவதை கண்ட நேரு அரசு சித்தூர் மாவட்டம் தகராறுக்குரிய பிரதேசம் என ஒப்புக் கொண்டது. எல்லை ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்தது. ஓராண்டாகியும் ஆணையம் அமைக்கப்படாததால் ம.பொ.சி. இதனைக் கண்டித்து 3.7.1954இல் சித்தூர் தினம் கொண்டாடமாறு அழைப்பு விடுத்தார்.
அப்போதைய முதல்வர் காமராசர் அவர்கள் காங்கிரசுகாரர்கள் யாரும் இதில் பங்கேற்கக் கூடாது என்று உத்தரவிட்டார். கட்சியின் தடையை மீறி தமிழரசு கழகம் சார்பில் சென்னையில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் இரண்டு இலட்சம் மக்கள் திரண்டனர். தமிழரசு கழகத்திற்கு செல்வாக்கு பெருகி வருவதைக் கண்டு காமராசர் அஞ்சத் தொடங்கினார். தமிழரசு கழகத்தை முடக்குவதற்கு காமராசர் திட்டமிட்டு வந்த நிலையில் ம.பொ.சி. 8.8.1954இல் காங்கிரசை விட்டு வெளியேறினார்.
தில்லியின் ஆசிர்வாதத்தோடு ஆட்சி நடத்திய இராசாசி கூட, "சென்னையை ஆந்திராவிற்கு தமிழகம் துறக்குமானால் நான் பதவி துறப்பேன்" என்று பேசினார். காமராசரோ "குளமாவது மேடாவது இந்தியாவில் தானே இருக்கிறது" என்று தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை விட்டுக்கொடுத்தார்.
மேலும் சங்கரலிங்கனார் நடத்திய "தமிழ்நாடு" பெயர் சூட்டும் போராட்டத்தை கண்டு கொள்ள மறுத்தார். எல்லை ஆணையம் அமைக்கக் கோரி இயக்கம் நடத்திய ம.பொ.சி.யை கட்சியிலிருந்தும் நீக்கினார். நேசமணிக்கும் இதே நிலை தான். மலையாள சமஸ்தான காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்தார். நேசமணியின் விருப்பமான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை சென்னை மாகாண காங்கிரசோடு இணைக்க மறுத்தார்.
எல்லை ஆணையம் தேவையில்லை என்று தமிழக முதல்வர் காமராசரும், ஆந்திர முதல்வர் கோபால் ரெட்டியும் அறிவித்த போது ம.பொ.சி. வெகுண்டெழுந்தார். மூன்றாண்டுகள் கடந்த நிலையில், 28.9.1956இல் சட்டமன்றம் முன்பு மறியல் நடத்தி ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
எல்லைப்போராட்டம் நடந்தப்போது அன்றைக்கு ம.பொ.சி மட்டுமே குரல் கொடுத்தார். வடக்கெல்லைப் போராட்டத்தை அவருடைய தமிழரசுக்கழகம் முன்னின்று நடத்தியது. அவருடன், தளபதி விநாயகம், மங்களம்கிழார், ரஷத் போன்றவர்களெல்லாம் வெகுண்டெழுந்து போராடினார்கள். ஏராளமான தமிழரசுக்கழகத் தோழர்கள் சிறைப்பட்டார்கள்.
தமிழ்நாடு முழுவதும் ரயில் நிறுத்தம், கறுப்புக் கொடி போராட்டங்கள் தீவிரமடைந்தன. வடக்கெல்லைப் போரில் தமிழரசு கழகத் தோழர்கள் பழனி மாணிக்கம், திருவாலங்காடு கோவிந்தசாமி ஆகியோர் வீர மரணமடைந்தனர்.
ம.பொ.சி சொன்னார், மாலவன் குன்றம் போனால் என்ன வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டுமென்று. அதற்காக போராடினார். பெரும் போராட்டம் நடைபெற்றது.
பெரும் போராட்டத்திற்குப் பிறகே நேரு அரசு பணிந்தது. படாஸ்கர் தலைமையில் எல்லை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. அது சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழர் பகுதிகளை கண்டறிந்து 1957இல் தீர்ப்பு வழங்கியது. அதன்படி 1. திருத்தணி வட்டத்தில் 290 கிராமங்கள், சித்தூரில் 29 கிராமங்கள், புத்தூரில் 320 கிராமங்களும், 417 சதுர மைல் நிலப்பரப்பும் தமிழகத்திற்கு கிடைத்தன. 2,39,502 மக்களும் தமிழகத்திற்குள் வந்தனர். வள்ளிமலை, திருவாலங்காடு, திருத்தணி, ஓசூர் பகுதிகள் நமக்கு கிடைத்தன. சித்தூர் நகரம், புத்தூர், நகரி, புதுப்பேட்டை, ஏகாம்பரக்குப்பம் பகுதிகள் நாம் இழந்தவைகளாயின.
அவர் பேராடியிருக்காவிட்டால் திருத்தணி இன்று நம்மோடு இல்லை.
ஆந்திராவோடுதான் இருந்திருக்கும்.
இருப்பினும், தமிழர்களின் வரலாற்று வழி வந்த கோலார், கொள்ளேகால், நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை, உடுமஞ்சோலை, செங்கோட்டை வனப்பகுதி, கண்ணகி கோயில், தேவி குளம், பீர்மேடு, திருப்பதி. சித்தூர், புத்தூர், நகரி, ஏகாம்பரம் குப்பம், ஆகிய பகுதிகளை தமிழகம் இழந்ததால் காவிரி நீருக்கும், முல்லைப் பெரியாற்று நீருக்கும், பாலாறு நீருக்கும் அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலை வந்து விட்டது.
‘மதராஸ் மனதே’ ஆந்திரர்களின் ஒற்றுமை - முறியடித்த ம.பொ.சி
‘மதராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் போராடினார்கள். ஆந்திரர்களின் ஒற்றுமைக்குக் காரணம் என்ன?
அதுபற்றி ம.பொ.சி ‘எனது போராட்டம்’ என்னும் தனது நூலில் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் எந்தக் கட்சியாக இருந்தாலும், அதாவது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிரஜா, சோசலிஸ்ட் என எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்கள் ஆந்திர மகாசபை என்ற குடையின் கீழ் ஒன்றாக நிற்கிறார்கள். விசால ஆந்திராவில் எந்தெந்தப் பகுதிகள் இருக்கவேண்டும் என்பதை அவர்கள் கட்சி சார்பில் போராடவில்லை. ஆந்திரர் என்ற ஒரே உணர்வுடன் ஆந்திர மகாசபையை அமைத்துப் போராடினார்கள். ஆனால், தமிழகத்தில் அப்படி ஒரு குடையின் கீழ் இணைந்து போராடவில்லை என்று ம.பொ.சி தனது நூலில் மிகவும் துயரத்துடன் எழுதியுள்ளார்.
ஆந்திரர்கள் எந்த அளவிற்கு ஒன்றுபட்டிருந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராக இருந்த அனந்த சயனம் ஐயங்காரும் விசால ஆந்திராவிற்கு ஆதரவு கொடுத்ததை கூறலாம். இவர்களின் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவிகள். ஆனால், ராதாகிருஷ்ணனும், அனந்த சயனமும் மத்திய அரசியலில் அங்கம் வகித்த ஆந்திரர்களுடன் ஒன்று சேர்ந்து விசால ஆந்திரத்தில் சித்தூரும், சென்னையும் சேர்க்கப்படவேண்டும் என்று பிரதமர் நேருவுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுத்தனர்.
இந்தக் காலகட்டத்தில் ம.பொ.சி சென்னை நகரசபையில் ஆல்டர் மேனாக இருக்கிறார். சென்னை மேயராக இருந்தவர் செல்வராயன். அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ம.பொ.சியும், செல்வராயனும் சேர்ந்து, உறுப்பினர்களின் ஆதரவையெல்லாம் ஒன்று திரட்டி, சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமென்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்தார்கள். மிகப் பெரும்பான்மையான ஆதரவுடன் தீர்மானத்தை கொண்டுவந்தார்கள் அந்தத் தீர்மானம்தான் அன்றைக்கு நேரு மனதை மாற்றியது.
அதற்குமுன் நேரு என்ன செய்தார்... ஆந்திரர்கள் மதராஸ் மனதே என்கிறார்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன், அனந்த சயனம் ஐயங்கார் போன்றவர்களும் வற்புறுத்துகிறார்கள், ஆகவே நேரு ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டத்திற்கு ஆளாகி, அவர் என்ன சொன்னார் என்றால்... இரண்டு மாநிலங்களுக்கும் சேர்ந்து சென்னை பொதுத் தலைநகரமாக இருக்கும் என்று சொன்னார். பஞ்சாப்பிற்கும், ஹரியானாவிற்கும் பொதுத் தலைநகரமாக சட்டீஸ்கர் இருப்பதைப் போல். சட்டீஸ்கர் யாருக்கு சொந்தமென்று அன்றைக்கு முடிவு செய்யாத காரணத்தால் இன்றைக்கும் சண்டை நடக்கிறது. இதைப்போல நேரு ஒரு முடிவு சொன்னார். அப்போது ம.பொ.சி வெகுண்டெழுந்து செல்வராயன் துணையுடன் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
அதுமட்டுமல்ல, அன்றைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு, காமராசர் தலைமையில் கூடி சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமானது என்று தீர்மானம் போட்டு டெல்லிக்கு அனுப்பியது. அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி நேருவுக்கு கடிதம் எழுதினார்.
சென்னை நகரம், தமிழர்களுக்கு சொந்தமானது. ஆந்திரர்கள் தனிமாநிலம் வேண்டுமென்று கேட்டப்பிறகு அவர்கள் பிரிந்துபோய் தனித் தலைநகரத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டுமே அல்லாமல், சென்னை நகரத்தை உரிமைக்கொண்டாட அவர்களுக்கு உரிமை கிடையாது. சென்னை நகரம் தமிழர்களுக்கு சொந்தமானது. ஆனால் சென்னை இரண்டு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகரமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் முடிவு சொல்வீர்களேயானால், இந்தக் கடித்தத்தையே எனது ராஜினாமாவாக எடுத்துக்கொள்ளலாம் என்று எழுதியிருந்தார். அப்படி எழுதுவதற்கான துணிவு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ராஜாஜிக்கு இருந்தது. அதன் பின்னணியில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி இருந்தார் என்பது மறுக்கமுடியாத வரலாறு.
#சோகவடிவமான தெற்கெல்லைப் போராட்டம்
அதேபோல், தெற்கெல்லையில் நடந்த போராட்டமென்பது மிகவும் சோகவடிவமானது. நேசமணி, நத்தானியல் பி.எல்.மணி, காந்திராமன் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து போராடினார்கள்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த நாஞ்சில் நாட்டுப் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டுமென்று அவர்கள் போராடினார்களே தவிர, தமிழ் நாட்டுத்தலைவர்கள் யாரும் அதற்காக போராடவில்லை. ஏறத்தாழ 12 பேருக்கும்மேலே அன்றைக்கு சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளை பிரஜா சோசலிசக்கட்சியைச் சேர்ந்தவர். அவரும் காங்கிரசும் சேர்ந்து அங்கே ஆட்சியமைத்தார்கள். குமரி மாவட்டத் தமிழர்கள் நாங்கள் தமிழ்நாட்டோடுதான் இருப்போம் என்று போராடியபோது, பட்டம் தாணுப்பிள்ளை போராடியவர்களை சுட்டுத்தள்ளச் சொல்லி வெறித்தனமாக உத்தரவிட்டார். ஆனால் அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்த டாக்டர் லோகியா கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டார்.
ஒரு சோசலிஸ்ட்டு ஆட்சியில், ஜனநாயக முறையில் போராடிய மக்களை ஒடுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். அதைவிட மோசம், கொடுமை அங்கே 12 உயிர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்காக பட்டம் தாணுப்பிள்ளை தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இவ்வாறு டாக்டர் லோகியா அறிக்கை வெளியிட்டார். இதெல்லாம் வரலாறு.
நேசமணி போன்றவர்கள் போராடியதன் விளைவாக குமரி மாவட்டத்தின் ஒரு பகுதியாவது நம்மோடு சேர்ந்தது. தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை ஆகியன எல்லாம் பரிபோனாலும் குமரி மாவட்டம் நம்மோடு சேர்ந்தது. இதற்கு குமரி மாவட்ட மக்களின் போராட்டமும், தியாகமும்தான் காரணம். அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நேசமணி, ம.பொ.சி போன்றவர்களுக்கு ஆதரவு கொடுத்திருந்தால் இந்த பகுதிகளை எல்லாம் இழந்திருக்கமாட்டோம்.
ஐக்கிய கேரளம் வேண்டுமென்று கேரளர்கள் போராடிக்கொண்டிருந்த போது, கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஏ.கே.கோபாலன் தேவி குளம், பீர்மேடு எங்களுக்குதான் சொந்தமென்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த ஜீவானந்தம் கொதித்தெழுந்தார்.
உண்மையான கம்யூனிஸ்ட்டு இப்படி பேசமாட்டான். ஏ.கே.கோபாலனின் இந்த அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். தேவிகுளம், பீர்மேடு சர்ச்சைக்குரிய பகுதி. எங்களுக்கும் அதிலே உரிமையிருக்கிறது ஆகவே, ஏ.கே.கோபாலன் கருத்தை தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லும் துணிவு ஜீவானந்தத்திற்கு இருந்தது. அதன் காரணமாக அவர் கட்சிக்குள்ளே பிரச்சனைகள் எல்லாம் வந்தன. ஜீவானந்தம் அதையெல்லாம் சந்தித்தார். இப்படி தமிழ் நாட்டு எல்லைப் பகுதிக்காக இவர்கள் எல்லோரும் போராடினார்கள்.
மா.பொ.சி. அவர்களால் சென்னை, திருத்தணியும், நேசமணி அவர்களால் கன்னியாகுமரியும் தமிழனுக்கு கிடைத்த ஆறுதல் பரிசாகும். மா.பொ.சியின் தமிழரசுக் கழகமும். நேசமணியின் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசும் போராடியிருக்கா விட்டால் மொழிவழித் தமிழ்நாடு கிடைத்திருக்காது.
இவ்வளவு போராட்டத்திற்கு பின் தான் தமிழ்நாடு என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது.
#சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாறிய வரலாறு.
தியாகி சங்கரலிங்கனார் பழம்பெரும் காங்கிரஸ் தியாகி; நாட்டின் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். நம் தாய்த் தமிழகத்துக்கு 'மதராஸ்' என்னும் பெயர் இருத்தல் கூடாது; ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்க வேண்டும் என உளமார விரும்பினார். தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை முன்னிட்டு 27.07.1956 ல் விருதுநகர் தேசபந்து திடலில் “உயிர் பெரிதன்று – மானமே பெரிது” என்ற இலட்சியப் பிடிப்புடன் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பை மேற்கொண்டார்.
12 அம்சக் கோரிக்கைகள்:
1. மொழிவழி மாநிலம் அமைத்தல் வேண்டும்
2. சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும்.
3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும்.
4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு அளித்தல் வேண்டும்.
5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிதல் வேண்டும்.
6. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் வாழ்தல் வேண்டும்.
7. தேர்தல் முறையில் மாறுதல் செய்தல் வேண்டும்.
8. தொழிற் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
9. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
10. விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை விளைச்சலில் வாரம் அளித்தல் வேண்டும்.
11. மத்திய அரசு இந்தியை மட்டும் பயன்படுத்தக் கூடாது.
12. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்தல் வேண்டும்.
உண்ணா நோன்பிருந்த சங்கரலிங்கனாரை அறிஞர் அண்ணா சந்தித்தார். அண்ணாவைக் கண்டவுடன் சங்கரலிங்கனாரின் உள்ளத்தில் புதுத்தெம்பு பிறந்தது. சங்கரலிங்கனார் அறிஞர் அண்ணா அவர்களிடம் மனம் திறந்து சில கருத்துக்களை வெளியிட்டார். “அண்ணா! நீங்களாவது என்னுடைய கோரிக்கைகளையும் தலையாய கோரிக்கையான ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை’ நிறைவேற்றுங்கள்”, என்று கேட்டுக் கொண்டார்.
அறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர்.ம.பொ.சிவஞானம், காங்கிரஸ் தலைவர் கக்கன், கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் உண்ணா நோன்பினைக் கைவிடுமாறு சங்கரலிங்கனாரிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், இலட்சியப்பிடிப்புடன் சங்கரலிங்கனார் உண்ணா நோன்பைக் கைவிட மறுத்துவிட்டார்.
உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சங்கரலிங்கனாரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. 10.10.1956 அன்று, காவல் துறையினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவச் சிகிச்சைக்கு சங்கரலிங்கனார் உடன்படவில்லை; 13.10.1956 அன்று சங்கரலிங்கனாரின் இன்னுயிர் உடலை விட்டுப் பிரிந்தது.
சங்கரலிங்கனார் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் “நான் ஒரு வேளை இறக்க நேரிட்டால், என் உடலைத் தயவு செய்து காங்கிரஸ்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனக்கு உறுதுணையாக இருந்த கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படையுங்கள்” என பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறியது போலவே இரு தினங்களில் இறந்தார். அவர் வேண்டுகோளின்படியே கம்யூனிஸ்ட் தலைவர்கள் கே.பி.ஜானகியம்மாள், கே.டி.கே தங்கமணி ஆகிய இருவரும் கையொப்பமிட்டு அன்னாரின் உடலைப் பெற்றனர்.
இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள், கம்யூனிஸ்ட்டு கட்சித் தொண்டர்கள், விருதுநகர் நகரசபைத் தலைவர், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்துக் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு சங்கரலிங்கனாரின் ‘புகழ் உடலுக்கு’ இறுதி மரியாதை செலுத்தினர்.
தியாகி சங்கரலிங்கனாரின் மறைவுச் செய்தி மாணவர்களை மீளாத் துயரில் ஆழ்த்தியது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உண்ணா நோன்பு இருந்தனர். 76 நிமிடங்கள் கல்லூரி வளாகத்தில் மௌனம் அனுசரித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை மாநகர அனைத்துக் கல்லூரி மாணவர்கள் 15.10.1956ல் வேலை நிறுத்தம் செய்து தியாகி சங்கரலிங்கனாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
சென்னை மாநில சட்டமன்றத்தில் சென்னை இராஜ்ஜியத்துக்குத் தமிழ்நாடு என்னும் பெயர் மாற்ற மசோதா 24.11.1956 அன்று கொண்டு வரப்பட்டது. மசோதா விவாதத்தின்போது பேசிய நிதியமைச்சர் ஆர்.வெங்கடராமன்,
“புதிய நாடு (மாநிலம்) அமைப்பது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்போது விவாதிக்கலாம் என்றும், சென்னை என்ற பெயர் உலகப் பிரசித்தி பெற்றதால், அப்பெயர் நிலைத்திருக்க வேண்டும்” என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுத் தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முதல் பாரதி பாடிய கவிதை இலக்கியம் வரை யாவிலும் ‘தமிழ்நாடு’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது என்பது அன்றைய ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை போலும்.
‘தமிழ்நாடு’ – எனப்பெயர் மாற்றுவதற்கு ஆதிக்க சக்திகள் மறுத்தன. அதனைக் கண்டித்து தந்தை பெரியார் விடுதலை இதழில் (10.11.1956)
“தமிழ், தமிழ்நாடு என்கிற பெயர் கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்க இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடைய கழகத்தினுடைய, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடைய வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை……. நமது மொழி எது? என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு, முளையிலேயே கிள்ளியெறியும்படியான முயற்சியில் ஈடுபடும்படி அனைத்து தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்”.
அறிஞர் அண்ணா பாராளுமன்ற உறுப்பினரானபோது, சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்னும் பெயர் மாற்ற மசோதாவை 16.03.1962 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். மத்திய அரசால் இம்மசோதா தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழ்நாடு பெயர் மாற்றச் சிறப்பு மாநாடு 25.12.1960 அன்று சிலம்புச் செல்வர் தலைமையில் கோகலே மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில் பெயர் மாற்றப் போராட்டத்திற்கு அறிஞர்கள் முழுமையான ஆதரவை நல்கினார். மாணவர்களும், பொது மக்களும் பல்வேறு வகைப் போராட்டங்களில் கலந்துக் கொண்டு ஆயிரக்கணக்கில் சிறை புகுந்தனர்.
அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வரான பின்னர் 14.04.1967 தமிழ்ப் புத்தாண்டன்று, சித்திரை முதல் நாளில் சென்னைக் கோட்டை முகப்பிலே “தமிழக அரசு தலைமைச் செயலகம்” என்னும் ஒளிவீசும் தமிழ்ப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
தமிழக சட்டமன்றத்தில் 18.07.1968 அன்று சென்னை மாநிலம் தமிழ்நாடு ஆகும் என்ற அரசியல் தீர்மானத்தை அறிஞர் அண்ணா முன் மொழிந்து பேசினார்.
'இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்ற மாற்றியமைக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை உறுதியாக கேட்டுக் கொள்வதுடன் அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அவை பரிந்துரை செய்கிறது’ –என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அறிஞர் அண்ணா, சட்டமன்றத் தலைவர் சி.பா.ஆதித்தனாரின் ஒப்புதல் பெற்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அண்ணாவின் குரலைத் தொடாந்து
“தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!” என மும்முறை முழங்கினர். அறிஞர் அண்ணா “இத்தீர்மானம் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பது தமிழர்க்கு – தமிழர் வரலாற்றுக்கு – தமிழ்நாட்டுக்கு -கிடைத்த பெரும் வெற்றியாகும். தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காக உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவது போல் அவர் எண்ணம் ஈடேறிவிட்டது” என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கான மசோதா 23.11.1968 அன்று நிறைவேறியது.
சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் விழா 01.12.1968 அன்று ‘பாலர் (கலைவாணர்) அரங்கில்’-சிறப்பாக நடைபெற்றது. அதே நாளில் தமிழ்நாடு பெயர் மாற்ற விழா தமிழ்நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
சங்கரலிங்கனார் உண்ணா நோன்பின் போது அறிஞர் அண்ணாவிடம் நேரில் கோரியபடி, அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சரானவுடன் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ்நாட்டுக்குச் சூட்டப்பட்டது.
‘தமிழ்நாடு’ – பெயர் மாற்றத்திற்காக, தமிழ் உணர்வுடன் தமிழக அரசு 76 நாட்கள் உண்ணா நோன்பிருந்து இன்னுயிர் ஈந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகரில் நினைவகம் அமைத்துள்ளது .
வடக்கெல்லைப் போரில் இரண்டு பேர் சிறையிலும், தெற்கெல்லைப் போரில் ஒன்பது பேர் துப்பாக்கிச் சூட்டிலும் பலியானார்கள்.
தற்போது வளர்ந்து வரும் தமிழ் உணர்வின் காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நவம்பர் 1ஆம் நாளில் தமிழக அரசு சார்பில் "தமிழ்நாடு நாள் " கொண்டாடப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளார்.
#வாழ்க_தமிழ்நாடு
#வாழிய_செந்தமிழ்.
#வாழிய_நற்றமிழர்.