தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறைகளைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன.
வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் கல்வியாண்டு, கோவிட் 2-வது அலை காரணமாக சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு தொடங்கியது.
இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில், வாரத்தில் 6 நாட்கள் திங்கட்கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை இயங்கி வருகின்றன.
இதற்கிடையே வியாழன், வெள்ளியன்று வரும் ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறைகளைத் தொடர்ந்து தொடர் விடுப்பு எடுக்க ஏதுவாக சனிக்கிழமை (16.10.2021) பள்ளிகளுக்கு தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புதுச்சேரி கல்வித்துறை துணை இயக்குநர் சிவகாமி வெளியிட்ட உத்தரவில், "வரும் 15, 16ம் தேதிகள் புதுச்சேரி, காரைக்காலில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.