எதிர்பார்ப்பிற்கும் -
யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளிதான் மனஅழுத்தத்திற்கு காரணம். இந்த
இடைவெளி அதிகரித்தால், மனஅழுத்தமும் அதிகரிக்கும். உதாரணம் சொல்கிறேன்.
‘நமது குழந்தைக்கு ஏதாவது ஒரு பள்ளியில் படிக்க இடம் கிடைக்கும்.
எங்கு
கிடைத்தாலும் குழந்தை அங்கு சேர்ந்து முடிந்த அளவு படிக்கும்’ என்ற
அளவுக்கு பெற்றோரின் எண்ணம் இருந்தால், ‘அட்மிஷன்’ எந்த பள்ளியில்
கிடைத்தாலும் அவர்கள் மனம் அதை ஏற்றுக்கொள்ளும். அப்போது அவர்களது
எதிர்பார்ப்பிற்கும்- யதார்த்தத்திற்கும் இடைவெளி இல்லை. அதனால்
குழந்தையின் அட்மிஷன் விஷயத்தில் அந்த பெற்றோருக்கு மனஅழுத்தம் தோன்றாது.
அதற்கு மாறாக, பிரபலமான பள்ளி ஒன்றில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை
உருவாக்கிக்கொண்டு அது நடக்காமல் போகும்போது அங்கே எதிர்பார்ப்பிற்கும்-
யதார்த்தத்திற்கும் இடைவெளி தோன்றி, அது அந்த பெற்றோருக்கு மனஅழுத்தத்தை
கொடுக்கும். ஆக நமக்கு மனஅழுத்தம் உருவாக யாரோ, எதுவோ காரணமில்லை. நாம்தான்
காரணம். நாம் யதார்த்தத்திற்கு தக்கபடியான எதிர்பார்ப்புகளை
உருவாக்கிக்கொண்டால், மனஅழுத்தமின்றி நிம்மதியாக வாழலாம்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இரண்டு விதமான மனிதர்களை
சந்தித்திருப்பீர்கள். ஒரே மாதிரியான சோகம், வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழும்
இரண்டு மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும். ஒருவர் அதை தாங்கிக்கொள்ளும்
சக்தியை பெற்றிருப்பார். இன்னொருவர் அதை தாங்கிக்கொள்ள முடியாமல்
நிலைகுலைந்துபோய் கடும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பார்.
ஒரே மாதிரியான சம்பவம்தானே! ஏன் ஒரு மனிதரால் அதை தாங்கிக்கொள்ள முடிகிறது?
இன்னொரு மனிதரால் அதை ஏன் தாங்கிக்கொள்ள முடியவில்லை? இது பற்றி சர்வதேச
அளவில் ஆய்வு ஒன்று நடந்தது. அதில், ‘ஒரு மனிதரின் மனோபலத்தை அவரது
பாரம்பரியம் 50 சதவீதம் அளவுக்கு தீர்மானிக்கிறது. வளரும் சூழல், சமூகம்,
கலாசாரம், நண்பர்கள், வளர்ப்புமுறை, கல்வி போன்றவை இன்னொரு 50 சதவீதத்தை
தீர்மானிக்கிறது’ என்று கண்டறிந்தார்கள். இதை வைத்து பார்க்கும்போது
பாரம்பரியத்தில் இருந்து என்ன கிடைத்தாலும் அதை நாம் ஏற்றுக்கொண்டுதான்
ஆகவேண்டும். ஆனால் வளர்ப்பு முறை, வளரும் சூழல், நண்பர்கள், கலாசாரம்,
கல்வி போன்றவைகளால் பெறும் மனோபல அளவை நம்மால் அதிகரித்துக்கொள்ள முடியும்.
அதன் மூலம் மனஅழுத்தமின்றி வாழவும் முடியும்.
காலையில் நீங்கள் விழிக்கிறீர்கள். படுக்கையில் இருந்து நீங்கள் கண்களை
திறக்கும்போதே மிக உஷாராக இருக்கவேண்டும். நான்கு முனை தாக்குதல் போன்று,
நாலாபுறமும் இருந்தும் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள்
உங்களை நோக்கி ஏவப்பட்டுக்கொண்டிருக்கும். வீட்டில் இருந்தும், பக்கத்து
வீட்டில் இருந்தும், டெலிவிஷன் வழியாகவும், செல்போன் வழியாகவும் நீங்கள்
பார்ப்பதும்- கேட்பதும் உங்களை விடாமல் துரத்தி மனஅழுத்தத்தை ஏற்படுத்த
முயற்சிக்கும். நீங்கள் இரண்டு காதுகள் இருக்கிறதே என்று எல்லாவற்றையும்
கேட்க முன்வந்தால், இரண்டு கண்கள் இருக்கிறதே என்று எல்லாவற்றையும் பார்க்க
முன்வந்தால், உங்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டு மன அழுத்தம் உருவாகிவிடும்.
இதில் இருந்து தப்பிக்க எதை பார்ப்பது, எதை கேட்பது, எதை பேசுவது என்று
சிந்தித்து முடிவெடுத்து உங்களுக்கு நீங்களே கடிவாளம் போட்டுக்கொள்ள
வேண்டும்.
சோஷியல் மீடியாக்கள் இப்போது தனி மனிதர்களுக்கு மன அழுத்தத்தை
உருவாக்குவதில் முன்னணியில் இருக்கின்றன. சைபர் கிரைம்களும், நிச்சயமற்ற
அரசியல் சூழல்களும், இயற்கை இடர்பாடுகளும்கூட மனஅழுத்தத்தை உருவாக்குவதில்
பங்கு வகிக்கிறது.
ஒருவருக்கு மன அழுத்தம் ஏற் படும்போது அவரது முடிவெடுக்கும்திறன் குறையும்.
அவர் மனதை ஒருநிலைப்படுத்த முடியாமல் தடுமாறுவார். அவரது
செயல்பாட்டுத்திறன் குறையும். நினைவாற்றல், தூக்கம், நிம்மதி, வேலை ஈடுபாடு
போன்றவை குறைந்துபோகும். அதோடு மனஅழுத்தத்தால் பல்வேறு நோய்களும்
தோன்றும். குறிப்பாக ஜீரணமண்டல நோய்கள் தாக்கும். வயிற்று தொந்தரவுகள்,
அசிடிட்டி பிரச்சினை, ஜீரண கோளாறு, நரம்பு மண்டல பாதிப்பு போன்றவை அதில்
குறிப்பிடத்தக்கவை.
அளவுக்கு மீறி வியர்த்தல், பதற்றம் உருவாகுதல், இதய துடிப்பு அதிகரித்தல்,
உயர்ரத்த அழுத்தம் தோன்றுதல் போன்றவைகளும் உருவாகும். ‘செர்விகல்
ஸ்பான்டிலோசிஸ்’ எனப்படும் கழுத்து தொடர்புடைய பாதிப்புக்கு நிறைய பேர்
கழுத்தில் ‘செர்விகல் காளர்’ பொருத்தியிருக்கிறார்கள். இந்த பாதிப்பிற்கு
மனஅழுத்தம் முக்கிய காரணமாக இருக்கிறது. மனஅழுத்தத்திற்கான காரணத்தை
கண்டறிந்து அதில் இருந்து மீண்டால்தான், இந்த நோய்க்கு தரப்படும்
மருந்தும், பயிற்சிகளும் முழுமையாக பலன்தரும்.
மனஅழுத்தத்திற்கு சரியான முறையில், சரியான நேரத்தில் தீர்வுகண்டு அதை
கட்டுப்படுத்தாவிட்டால் அது தற்கொலை சிந்தனையை உருவாக்கிவிடுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்கொலை
செய்துகொள்கிறார்கள். அதில் 8 முதல் 10 ஆயிரம் பேர் வரை மாணவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. கேரளாவும், தமிழ்நாடும் இதில் முன்னிலை வகிக்கிறது.
தற்கொலை செய்துகொள்கிறவர்களில் ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள். வேலையின்மை,
உறவுச்சிக்கல், தொடர் தோல்விகள், மனம்விட்டுப் பேச நண்பர்கள் இல்லாமை,
குடும்பத்தினரின் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளை ஈடுசெய்ய முடியாமை போன்ற
பல காரணங்கள் ஆண்களின் தற்கொலைலை அதிகரிக்க காரணமாக இருக்கிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...