உலகில், வளர்ந்த நாடுகளில் உள்ள வங்கிகள், வைப்பு நிதிக்கான வட்டியை குறைத்தது; அதிக லாபம் தருவது உள்ளிட்ட காரணங்களால், முதலீட்டாளர்கள், தங்கம், வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.இதனால், உலக சந்தையில், தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. இதன் எதிரொலியாக, தமிழகத்தில், இம்மாதம், 7ம் தேதி, 1 கிராம் தங்கம், 5,416 ரூபாய்க்கும்; சவரன், 43 ஆயிரத்து, 328 ரூபாய்க்கும் விற்பனையாகின. இதுவே, இதுவரை தங்கம் விற்பனையில், உச்ச விலையாக உள்ளது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:தங்கம் விலை திடீரென அபரிமிதமாக உயரும்போது, சிறிய, 'பிரேக்' ஏற்படும். அந்த சமயம், தங்கம் விலை குறையும். அது போன்ற சூழல் தான் தற்போது ஏற்பட்டுள்ளது.குறைந்து வந்த தங்கம் விலை, சர்வதேச சந்தையில், நேற்று மாலை மீண்டும் உயர துவங்கியுள்ளதால், தமிழகத்திலும் விலை உயரும்.இவ்வாறு, அவர் கூறினார்.









