- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Monday 7 January 2013

     

கணிதத்தை காதலி -உலகின் சிறந்த "கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜன். இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினம், தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படும் என சென்ற ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். நமது வாழ்வில் கணிதத்துக்கு முங்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. ராமானுஜன் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது. தற்போதைய தலைமுறையினர், கணிதத் துறையில் அதிகளவில் ஈடுபட முன்வர வேண்டும். ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு. இவர், 1887, டிச.22ல், ஈரோட்டில் பிறந்தார். 12வது வயதில், கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயன்றார். அப்போது, "மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில்' ராமானுஜனுக்கு சிறு வேலை கிடைத்தது. அவரது கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக மேனேஜர் எஸ்.என்.அய்யர், ராமானுஜன் கண்டுபிடித்த முக்கிய தேற்றங்களையும், நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப உதவினார். அதற்கு பதில் இல்லை.இருப்பினும், 1913ல் ராமானுஜன், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டிக்கு மீண்டும் அனுப்பினார். அதைக் கண்ட ஹார்டி, இதை படைத்தவர் சாதாரண மனிதர் அல்ல, அவர் ஒரு மேதையாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து, ராமானுஜனை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அழைத்தார். இதை ஏற்று, 1914ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ராமானுஜனின் திறமை, சில நாட்களிலேயே உலகின் கவனத்தை ஈர்த்தது. ராமானுஜனின் உயர்வில் பேராசிரியர் ஹார்டிக்கு முக்கிய பங்கு உண்டு. உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்து வரவில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டு, 1917ல் இந்தியா திரும்பினார். 1920ல் மறைந்தார்.

                                                                            *

  விவேகானந்தர் பொன்மொழிகள்

விவேகானந்தர் பொன்மொழிகள்
  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
  • மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.
  • பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.
  • காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான்.
  • உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது.
  • நீ உன்னைப் பலவீன்ன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.
  • சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.
  • மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு
  • நாத்திகனுக்கு தருமசிந்தனை இருக்கலாம். ஆனால் மதகோட்பாடு இருக்க இயலாது. மத்த்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தருமசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.
  • குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றர்கள் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.
  • செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனை விட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்து வாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.
  • நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதை விட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.
  • மரணத்தை வென்று, அதறக்குமேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதைனைத் தெரிந்து கொள்ளத்துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.
  • மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.
  • இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும் - பயத்தை உண்டு பண்ணுகிற எதையும் நிற்க வேண்டும். அவற்றுடன் போராடவேண்டும். பயந்து ஓடலாகாது.
  • மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும்.
  • மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மத்த்திலிருந்து வேறொரு மத்த்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டுமே.
  • கடவுளை தாம் விரும்பும் உருவத்தில் ஒவ்வொரு மதப்பழகப்படி ஒவ்வொருவரும் வணங்கலாம்.
  • தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும்.
  • பணி செய் அதற்குப் பெயர் தவம். தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக எண்ணாதே அவ்வாறு உழைக்கும் பணி தெய்வத்திற்குச் செய்யும் திருத்தொண்டைப் போன்றது.
  • உடல் இன்பமே பெரிதன்று. வறுமையில் வாழ்ந்தாலும், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று கஷ்டத்தில் வாடுவதை விட, பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு, தன் நலத்தைக் குறைத்து, பிறர் நலத்தை பேண வேண்டும்.
  • இறைவனே இன்று உலகாமகப் பரந்து விரிந்து நிற்கின்றான். கடவுளை நினைத்து பக்தியோடு பணி செய். அதுவும் ஒழ்க்கத் தோடு பணி செய். ஒழுக்கம் என்பது தன்னலமற்ற சேவை. அதுவே சிறப்பு. அந்த சிறப்பை அடைய மனிதன் முயல வேண்டும்.
  • நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். ஏழைகள், துன்ப்ப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், அவர்களை ஏன் முதலில் பூஜை செய்ய்க்கூடாது?
  • உடல் வலிமையுடையவன், வலிமை குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும்.
  • செல்வம் படைத்தவன், செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்ததை விட வேண்டும்.
  • முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போடு நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தது. ஆனாலும் ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோக்ஷமில்லை.
  • பாவம் என்பது ஒன்று உண்டு என்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.
  • நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும்.
  • இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.
  • அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். ஆனால், அடக்கப்பட்டுச் சரியான வழியில் செல்கின்ற மனம் நம்மை என்றென்றைக்கும் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.
  • எப்போதும் விரிந்த மலர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவது மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது.
  • எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.
  • யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான்.
  • குருவுக்குப் பணிந்து நடந்தாலும் பிரம்மச்சரிய ஒழுக்கத்தை நன்கு கடைப்பிடித்தலம் வெற்றிக்கு வழிகளாகும்.
  • சிங்கங்களே சீறி எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.
  • போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே, மிருகத்தைப் போல வாழாதே!
  • இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே! என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லவலிமை பெற்றவன், உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் சாதிக்ககூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.
  • பயங்கரத்தை எதிர்த்து நில். ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது. கருத்து இதுதான் - எது வந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும். முழு உலகமும் நமக்கு எதிராக எழுந்து எதிர்த்து நிறகட்டும். குறிக்கோளும் கொள்கையும் மாறாமல் முன்னேறிச் செல்.
  • நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனத் இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.
  • நீ வீணாக அழுவதேன்? மரணமோ, நோயோ உன்கில்லை. நீ அழுவதேன்? துன்பமோ, துரதிர்ஷ்டமோ உனக்கு கிடையாது. நீ ஏன் அழ வேண்டும்? மாற்றமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. மக்கள் என்ன வேண்டுமானாலும் இரு. பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் காலடியில் பணிந்து கிடக்கும்.
  • பகுத்தறிவைக் கொண்டவன் பகவானை அடைய வழிகளை நுட்பமாகத் தேடுகிறான். தனது உடம்பால் உழைத்து இறைவனை அடைய நினைப்பவன் சேவாமார்க்கத்தை நாடுகிறான். சமூக சேவையில் இறைபணியைத் தேடுகிறான். மந்திரப் பூர்வமாக நாடுபவன் வீட்டிலும் ஆலயத்திலும் பூஜிக்கிறான்.
  • கர்மயோகம்: தனது கடமைகளைச் செய்வதாலும் அதற்குரிய செயல்களை ஆற்றுவதாலும் இறை உணர்வைப் பெறுவது.
  • பக்தியோகம்: தனது அந்தரங்கமான பக்தி உணர்வால், இறைவனை நினைந்து அவரைத் தனக்கே உரியவராக அடைய முற்படுவது.
  • ராஜயோகம்: மனத்தைக் கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி இறைவன்பால் தனது சிந்தனையை வழிப்படுத்தி, இறை உணர்வைப் பெறுவது.
  • ஞானயோகம்: தனது அறிவாற்றலால் பல்வேறு சாஸ்திர நூல்களைப் படித்தும் ஞானபோதனைகளைப் பெற்றும், இறைவனை உணர்ந்து அவரை அடைய முற்படுவது.
  • இந்தச் சீதையெனும் இலட்சியத்தைப் போன்று வேறில்லை. எது எது பரிசுத்த மனதோ, எது எது புனிதமானதோ பெண்ணினத்திலே பெண்மை என்ப்போற்றப்படுவது எதுவோ, அதற்குப் பெயர்தான் சீதை! குரு ஒருவர் ஒரு பெண்மணியை ஆசீர்வதிக்க வேண்டுமென்றாலும், ஒரு குழந்தையை வாழ்த்த வேண்டுமென்றாலும், சீதையைப் போல் இரு என்ற கூறி ஆசீர்வதிப்பார்.
  • மனிதனாக வாழ முயற்சி செய். தோல்விகளை ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.
  • பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் த்த்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும்.
  • ஒரு கழுதை மீது நூலகத்தை ஏற்றிவிட்டால் அது பண்டிதன் ஆகிவிடாது. நூல்கள் நிறைய படிப்பதனால் எவனும் பயன்பெற முடியுமா?
  • நம் நாட்டுப் பொன்னை பித்தளையாகவும், அயல்நாட்டுப் பித்தளையைத் தங்கமாகவும் கருதக்கூடிய வகையில் நம் நாட்டு மக்கள் தங்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். நவீன காலமேற்றிசைக் கல்வி, நம் நாட்டு மக்களை இவ்வாறு செய்திருப்பது மந்திர மாயம் போல் இருக்கிறது.
  • ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது போலவே, தீமையிலிருந்து அறிவைப் பெறுகிறான்.
  • உண்மையாக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது.
  • எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும், தவிர்க்க முடியாத தவறுகள் சில ஏற்படவே செய்யும்.
  • பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.
  • விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.
  • கல்வி என்பது ஒருவனுடைய மூளயல் பல விஷயங்களைத் திணிப்பதுன்று, அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் நன்றாக ஜீரணமாகிக் பயன்படவேண்டும்.
  • ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும்.
  • ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின், அவனது பெருஞ்செய்ல்களைப் பார்க்க வேண்டாம். அவன் தன் சாதாரணக் காரியங்களை எங்ஙனம் செய்கிறான் என்பதை கவனிக்க வேண்டும்.

  • நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி, அல்லது யாராக இருந்தாலும் சரி. உன்னைடைய சுகதுக்கங்களை மறந்து நீ வேலை செய்க. இது ஒன்றே இப்பொழுது நீ கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடமாகும்.

  • எல்லாப் பேய்களும் நம்முடைய மனத்திலே தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும்.

  • இன்பங்களை அனுபவிக்கும் ஆசையை முற்றிலும் மனத்திலிருந்து நீக்காமல் ஆன்மிக வாழ்வில் எதையுமே அதையமுடியாது.

  • இன்பங்கள் என்ற உன்னுடைய எல்லா ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போது உன்னால் தியாகம் செய்ய முடிகிறதோ அப்போது நீ ஒரு புத்தர் ஆகிவிடுகிறாய்.

  • மனிதன் இயற்கையை எதிர்த்துப் பொராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான்.

  • வெற்றிப் பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

  • மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான். பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?
  • மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும்.
  • நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை எண்ணிச் சிரிப்போம்.
  • பெண்ணுக்குரிய அச்சம், நாணம் போன்ற பண்புகளை இந்தியப் பெண்களிடம் மட்டுமே நாம் பார்க்கமுடியும். அத்தகைய அற்புதமான குணங்களை உடைய பெண்களை முன்னேற்ற உங்களால் முடியவில்லை.

  • நூல்களைக் கற்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஆனாலும் அனுபவமே சரியான ஆசான். அதுவே உண்மையாம கல்வி.

  • நூல்நிலையம் ஒன்றில் இருக்கும் எல்லா நூல்களையும் ஒன்றுவிடாமல் படிக்கும் புத்திசாலியைவிட, ஐந்து நல்ல, உயர்ந்த கருத்துகளை அறிந்து கொண்டாலே போதும், நீயே மெத்தபடித்தவனாக இருப்பாய்.
  • பூரணத்துவம் பெற்ற மனிதன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெறுவதற்கு எந்தப் பொருளை அடை ய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.
  • எல்லா ஒழுக்கத்திற்கும், எல்லா ஆன்மீக உணர்விக்கும் பிரம்மச்சரியமே ஆதாரம்.
  • வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலனின்ம மனநிலை நமக்குத் தேவையே இல்லை. மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் எதிர்த்துநிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது வேண்டும்.
  • கோழைகள் எப்போதும் வெற்றியடைய முடியாது.
  • சிவன், விஷ்ணு என்றெல்லாம் எத்தனையோ நூறு பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே கடவுள்தான். பெய்ர்கள் வேறு. ஆனால் இருப்பது ஒன்றுதான்.
  • அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.
  • துருப்பிடித்தத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
  • உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.
  • வழிபாடுகள் எந்தப் பெயரிலும் இருந்தாலும் சரி. எந்த வித்த்தில் இருந்தாலும் சரி. அவை அனைத்தும் ஒரே கடவுளக்குச் செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் உணர வேண்டும்.
  • தனது குழந்தைகளில் யாரேனும் ஒருவருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால் அதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய்.
  • இந்தியாவின் பாமர மக்களாகிய இந்த ஏழை எளியவர்களை நாம் உயர்த்த வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கு உரிய கருத்துக்களை நம்பிக்கயோடும், சிரத்தையோடும், அன்பான சொற்களால் அவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
  • நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்கு கல்வியறிவைப் புகட்டு. இதுவே உனது கடமையாக்க் கொள்.
  • எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தல் பலவீன்னாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுகிறாய்.
  • மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மத்த்தின் அடிப்படை இலட்சியமாகும்.
  • இறைவனை ஒவ்வொரு உயிரிலும் காண்பவன் ஆத்திகன்.
  • எவன் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை இல்லையோ அவன்தான் நாத்திகன். ---
    விவேகானந்தர்
  
 


                                           ஸ்ரீநிவாச ராமனுஜன் 

 ஐரோப்பிய கணித அறிஞர்கள் சிலரின் வாழ்க்கையை விவரிக்க ஆரம்பித்த தொடர் இது. ஆனால் அதற்குள்ளாக இந்தியா உருவாக்கிய ஒரே மாபெரும் கணித மேதையைப் பற்றிச் சொல்லிவிட ஆசை. ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் வசித்த ஸ்ரீநிவாச ராமானுஜனின் வாழ்க்கையை இன்றுவரை இந்தியர்கள், அதுவும் குறிப்பாகத் தமிழர்கள் அறிந்தாரில்லை
ராமானுஜன் ஒரு கணித மேதை என்று நாமும் தபால் தலைகள் வெளியிட்டுச் சிறப்பித்துவிட்டோம். பாடப் புத்தகங்களில் ஒருவேளை அவரது பெயர் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் அவர் என்னதான் செய்தார், ஏன் அவருக்கு இத்தனை பேரும் புகழும் உலக அளவில் இருக்கிறது என்பதைக் கணிதம் அறிந்த பெரும்பாலானோர்கூடப் புரிந்துகொள்வதில்லை. இன்று இந்தியாவில் மிகச் சில கணித விற்பன்னர்கள் மட்டுமே ராமானுஜனின் பெருமையை முழுதாக உணர்ந்துள்ளனர்.
அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ராமானுஜன் செய்த எதுவும் பன்னிரண்டாம் வகுப்பு கணிதப் புத்தகத்தில் தரக்கூடிய அளவு எளிதானதல்ல. ராமானுஜன் சமன்பாடு, ராமானுஜன் தேற்றம் என்று பெயரிட்டு, பள்ளிக்கூட அளவில் தரக்கூடிய அளவுக்கு சுளுவானதல்ல. ஒருவர் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படிக்கும்போதுகூட ராமானுஜனின் கண்டுபிடிப்புகளுடன் பரிச்சயம் இன்றி இருக்கக்கூடும்.
அப்படியானால் ராமானுஜன் என்னதான் செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளாமலேயே வெறுமனே புகழாரம் மட்டும் சூட்டிக்கொண்டிருக்கப்போகிறோமா நாம்? உண்மையில் ஓரளவுக்குக் கணிதம் படித்திருக்கும் எனக்கு ராமானுஜனின் கணிதத்தை விளக்கிச் சொல்வது, அதுவும் எளிமையாக நம் வாசகர்களுக்கு விளக்கிச் சொல்வது மிகவும் கடினம். என் நம்பிக்கை எல்லாம், ராமானுஜனின் கண்டுபிடிப்புகள் எப்படி கணிதத்துறையிலும் அறிவியல் துறையிலும் ஆராய்ச்சியாளர்களுக்குப் பேருதவியாக உள்ளது என்று தமிழ் மக்களுக்குப் புரியும்படி விளக்கும் ஒரு புத்தகத்தை உருவாக்குவதுதான்.
ராமானுஜன் தானாகவே தோன்றிய சுயம்பு. மாபெரும் கணித மேதைகள் எல்லோருமே அப்படித்தான் தோன்றுகிறார்கள். அவர்களால் எண்களுடன் நேரடியாகப் பேசமுடியும். எண்களின் உலகுக்குள் நுழைந்து வெளிவரமுடியும். அவர்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள், கணித மொழியை எப்படிக் கற்றுக்கொள்கிறார்கள் என்பது சாமானியர்களான நமக்கு எளிதில் புரிவதில்லை.
ராமானுஜனின் திறமைகள் ஓரளவுக்கு முழுமையாக வெளிவரக் காரணம் காட்ஃப்ரே ஹரால்ட் ஹார்டி என்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர். ராமானுஜனின் உண்மையான திறமையைப் புரிந்துகொண்டு, அவரை கேம்பிரிட்ஜ் வரவழைத்து, அவருக்குக் குருவாக இருந்து, சீடனாகவும் இருந்து, கற்பித்து, கற்றுக்கொண்டு, ராமானுஜன் இறந்தபிறகும் ராமானுஜனின் கணிதத்தை வெளியுலகுக்குக் கொண்டுசென்றதற்கு நாம் அனைவருமே ஹார்டிக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும்.
அதே அளவுக்கு, ஜார்ஜ் ஆண்டிரூஸ், புரூஸ் பெர்ண்ட் ஆகிய இருவருக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ராமானுஜன் பல நோட்டுப் புத்தகங்களில் தன் கணித ஆராய்ச்சிகளை விட்டுச் சென்றிருந்தார். அதில் சில யார் கண்ணிலும் படாது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆவணக் காப்பகத்தில் கிடந்துள்ளன. அவற்றை மீட்டெடுத்து அவற்றில் உள்ள தகவல்களை வெளியுலகுக்குக் கொண்டுசென்றவர் ஆண்டிரூஸ். அவருக்கு அடுத்து, அவருடன் சேர்ந்து, ராமானுஜனின் நோட்டுப் புத்தகங்கள் அனைத்தையும் தொகுத்து, சமன்பாடுகளை நிரூபிக்கும் விதத்தைக் கொடுத்து, ராமானுஜன் கணிதத்தைக் கற்க விரும்பும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருப்பது புரூஸ் பெர்ண்ட்தான்.
புரூஸ் பெர்ண்ட் மே மாத இறுதியில் சென்னையில் சில இடங்களில் சொற்பொழிவாற்ற வருகிறார். அவரிடமிருந்து ராமானுஜனின் கணிதச் சாதனைகளை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் முயற்சியில் நான் இருக்கிறேன். எனவே இந்த மாதம், ராமானுஜனின் வாழ்க்கை பற்றிய தகவல்களை அளிக்கிறேன். அடுத்த மாதம், ராமானுஜனின் கணிதச் சாதனைகள் பற்றியும் அவர் விட்டுச் சென்ற வழியில் இன்று பிற கணித விற்பன்னர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் விளக்குகிறேன்.
*
ராமானுஜன் பிறந்தது 22 டிசம்பர் 1887-ல். கும்பகோணத்தில் துணிக்கடை நடத்திவந்த ஒருவரிடம் கணக்கராகப் பணியாற்றி வந்த ஸ்ரீநிவாசன் அவரது தந்தை. கோமளவள்ளி அவரது தாய். கோமளவள்ளியின் தகப்பனார் ஈரோட்டில் நீதிமன்றத்தில் அமீனாவாகப் பணியாற்றிவந்தார். அந்த ஊரில்தான் ராமானுஜன் பிறந்தார்.
ராமானுஜனுக்கு அடுத்துப் பிறந்த மூன்று குழந்தைகள் உடனேயே இறந்தும் விட்டன. பின்னர் வெகு ஆண்டுகளுக்குப் பிறகு ராமானுஜனுக்கு ஒரு தம்பி பிறந்து உயிருடன் வெகு காலம் இருந்தார்.
ராமானுஜனின் படிப்பு முழுவதுமே கும்பகோணத்தில்தான் இருந்தது. முதலில் காங்கேயன் தொடக்கப் பள்ளியிலும் பின்னர் டவுன் ஹை ஸ்கூலிலும். சாதாரண பள்ளிக் கல்வியின்மூலம் யாரும் கணித மேதை ஆகிவிட முடியாது. ராமானுஜனின் கணிதத் திறனைத் தூண்டிவிட்டதில் இரு புத்தகங்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. ஒன்று எச்.எல். லோனியின் முக்கோணவியல் பற்றிய புத்தகம். அடுத்தது ஜி.எஸ். கார் என்பவர் அடிப்படைக் கணிதச் சூத்திரங்கள் அனைத்தையும் தொகுத்து அளித்திருந்த புத்தகம். இவை பொதுவாகக் கல்லூரியில் இருப்போர் படிக்கவேண்டிய புத்தகங்கள். ஆனால் ராமானுஜன் உயர் நிலைப் பள்ளியில் சேரும்போதே இந்தப் புத்தகங்களைப் பார்வையிடும், ஆழ்ந்து கற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குக் காரணம் ராமானுஜனின் வீட்டின் அருகில் தங்கிப் படித்த கல்லூரி மாணவர்கள்.
இவ்வாறு தன் கையில் கிடைத்த புத்தகங்களில் உலகத்தில் ஆழ்ந்துபோன ராமானுஜன், மிகச் சிக்கலான கணித உண்மைகளை ஆசிரியர் யாருமின்றித் தானே புரிந்துகொள்ள ஆரம்பித்தார். விரைவில் இந்தியாவில் உள்ள கணித ஆசிரியர்களால் எட்ட முடியாத உயரத்துக்குச் சென்றுவிட்டார் அவர். ஆனால் அது அவரது கல்வியைப் பாதிக்கத் தொடங்கியது. பள்ளிக் கல்வியை எளிதாகக் கற்று மதிப்பெண்கள் பெற்ற ராமானுஜனால் கல்லூரியை அப்படி எதிர்கொள்ள முடியவில்லை.
கணிதம் அவருக்கு எளிதென்றாலும் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வியுற்றார். இரண்டு வருடங்கள் தேர்வு எழுதியும் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. பின்னர் சென்னை வந்து பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஆனால் இங்கும் அடுத்தடுத்து இரண்டு வருடங்கள் தேர்வில் அவரால் வெற்றி பெறமுடியவில்லை. ஆக 1904 முதல் 1907 வரை நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பரீட்சையில் தோல்வி அடைந்தார்.
1908-ல், ராமானுஜனுக்கு ஜானகி என்ற சிறுமியை மணம் முடித்தார் ராமானுஜனின் தாய். கல்லூரிப் படிப்பைப் பெறமுடியவில்லை. வேலையும் இல்லை. மணமோ ஆகிவிட்டது. அடுத்த சில ஆண்டுகள் மாணவர்களுக்கு ட்யூஷன் சொல்லிக்கொடுத்து ஒப்பேற்றினார். பணம் படைத்தவர்களிடம் தனது கணித நோட்டுப் புத்தகங்களைக் காண்பித்து உதவித்தொகை கேட்டார். இப்படி இருந்த நிலையில் 1912-ல் சென்னை துறைமுகத் துறையில் மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் எழுத்தராக ராமானுஜனுக்கு வேலை கிடைத்தது.
ராமானுஜனின் மேலதிகாரியாக இருந்தவர் நாராயண ஐயர். துறைமுகத்தின் முதன்மை அதிகாரி சர் ஃப்ரான்சிஸ் ஸ்பிரிங் என்பவர். இருவரும் ராமானுஜனின் உண்மையான கணித ஆர்வத்தைப் புரிந்துகொண்டு அவருக்குச் சிரமமான வேலைகளைத் தராமல், கணிதத்தில் மூழ்க உதவினர். இந்த வேலையில் இருக்கும்போதுதான் ராமானுஜன் இங்கிலாந்தில் இருக்கும் பல்வேறு கணிதப் பேராசிரியர்களுக்குக் கடிதம் எழுதி, தான் கண்டுபிடித்த சிலவற்றை மாதிரிகளாக அனுப்பிவைத்தார்.
அப்படி அனுப்பிய பல கடிதங்கள் குப்பைக்கூடைக்குப் போயின. ஆனால் 1913-ல் ஹார்டி தனக்குக் கிடைத்த கடிதத்தைக் குப்பையில் போடவில்லை. மாறாக, தன்னுடன் வேலை செய்யும் லிட்டில்வுட் என்பவருடன் சேர்ந்து அந்தக் கடிதத்தில் உள்ளவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்துவிட்டு இந்த ஆள் லேசுப்பட்டவரில்லை என்பதை முடிவு செய்தார்.
அடுத்த பல மாதங்கள் ஹார்டியும் ராமானுஜனும் கடிதப் போக்குவரத்தில் ஈடுபட்டனர். ராமானுஜன் எப்படியாவது இங்கிலாந்துக்கு வந்துவிட்டால் அவருக்குப் பெருத்த வரவேற்பு இருக்கும் என்று முடிவெடுத்தார் ஹார்டி. ஆனால் ஆசாரமான குடும்பத்தில் பிறந்த காரணத்தால் கடல் தாண்டிச் செல்லக்கூடாது என்ற மூட நம்பிக்கை ராமானுஜனைத் தடுத்தது. பின்னர் ஒருவழியாக 1914-ல் இங்கிலாந்து செல்ல ராமானுஜன் ஒப்புக்கொண்டார்.
இதற்கு ஆகும் செலவை யார் ஏற்றுக்கொள்வார்கள்? சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், சென்னை மாகாண கவர்னர் ஆகியோர் முயற்சியால் சென்னை பல்கலைக்கழகம் இந்தச் செலவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது. 1914 மார்ச்சில் இங்கிலாந்து செல்லும் கப்பல் கிளம்பியது.
கேம்பிரிட்ஜ் சென்ற ராமானுஜன் அங்குள்ள டிரினிடி கல்லூரியில் சேர்ந்துகொண்டார். அவரது ஆராய்ச்சிகள் விரைவாகச் செல்லத் தொடங்கின. உணவு, குளிர் ஆகியவற்றில் சில சுணக்கங்கள் இருந்தாலும் ராமானுஜன் ஓரளவுக்கு அவற்றை எதிர்கொண்டு வாழத் தொடங்கியிருந்தார். ஆனால் அதே ஆண்டு முதல் உலகப்போர், ஜூன் 1914-ல் வெடித்தது. இந்தப் போரில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா என்று அனைத்துப் பெரிய நாடுகளும் ஈடுபட்டன. இது இங்கிலாந்து மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. ராமானுஜனின் வாழ்க்கையையும்தான்.

                                                                   

11 செப்டம்பர் 1914 அன்று ராமானுஜன் தன் தாய்க்கு முதல் உலகப்போர் குறித்து நீண்ட கடிதத்தை (தமிழில்) எழுதினார். அதிலிருந்து சிறு பகுதி கீழே:

இப்பொழுது நடக்கிற சண்டைபோல் வேறு ஒரு சமயமும் நடக்கவில்லை. கோடிக்கணக்கான ஜனங்கள் சண்டை. ஒரு கோடி இரண்டு கோடியில்லை. ஜர்மானியர்கள் அனேக பட்டணங்களையெல்லாம் கொளுத்தி, எல்லா ஜனங்களையும் குழந்தை முதல் பெண்கள், பெரியவர்கள் எல்லாரையும் வெட்டி எறிந்துகொண்டிருக்கிறார்கள். பெல்ஜியம் என்ற சின்ன தேசத்தை அனேகமாய் நாசம் செய்துவிட்டார்கள்.

...


இது பூமியில் சண்டை, சமுத்திரத்தில் நடுவில் இருந்துகொண்டு சண்டைபோட்டு அனேக கப்பலை முழுக்கடிக்கிறார்கள். இது இரண்டு விதம். நேராக கப்பலை சுடுகிறதொன்று; தெரியாமல் தண்ணிக்கு கீழாக போய் கப்பலை முட்டி கவிழ்த்து விடுகிறதொன்று. இது மட்டுமல்ல. ஆகாசத்தில் வெகு தூரத்தில் விமானங்களில் ஏறி வந்து ஆகாசத்திலிருந்தபடியே குண்டு வைத்து ஊரை நாசம் செய்கிறார்கள். ஆகாசத்தில் விமானங்கள் வருவதை பார்த்துவிட்டால் ஊரிலிருந்து விமானங்கள் கிளம்பி ஆகாசத்தில் வெகுவேகமாகப் பறந்துபோய், விமானங்களை மோதவிட்டு, விமானங்கள் உடைந்துபோய் சாகிறார்கள்.
லிட்டில்வுட் போரில் ஈடுபட சென்றுவிட்டார். மற்ற பல பேராசிரியர்கள் போர் காரணமாகத் தங்கள் ஆராய்ச்சி ஆர்வத்தை இழந்துவிட்டனர். ஆனால் ஹார்டியும் ராமானுஜனும் தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். போர் தீவிரமாக நடக்கும்போதும் 1915-ல் ராமானுஜன் மிக அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். அவற்றுக்காகவே ராமானுஜனுக்கு இன்றைய டாக்டரேட் பட்டத்துக்கு இணையாக டிரினிடி கல்லூரி பி.ஏ (ஆராய்ச்சி) என்ற பட்டத்தை மார்ச் 1916-ல் வழங்கியது. கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் இரண்டாண்டு ஃபெயில், பச்சையப்பன் கல்லூரியில் இரண்டாண்டு ஃபெயில் ஆகிய அவமரியாதைகளை இந்தச் சிறப்புப் பட்டம் துடைத்தது.

1916-லும் தொடர்ந்தது கணித ஆராய்ச்சி. ஆனால் ஏப்ரல் 1917-ல் உடல் நிலை மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார் ராமானுஜன். உடனடியாக இந்தியா அனுப்பினால் அங்கே குடும்பத்தார் கவனித்துக்கொள்வார்கள். ஆனால் அப்போது முதலாம் உலகப்போர் தொடர்ந்து தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. இங்கிலாந்தின் பயணிகள் கப்பல்களைக்கூட ஜெர்மனி குண்டு வீசித் தாக்கிக்கொண்டிருந்தது. எனவே போர் முடியும்வரை ராமானுஜனை இங்கிலாந்திலேயே வைத்திருப்பது என்று முடிவானது. உணவு இப்போது பெரும் பிரச்னை ஆயிற்று.

மே 1918-ல், ராமானுஜனுக்கு ஃபெலோ ஆஃப் ராயல் சொசைட்டி என்ற கௌரவம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கேம்பிரிட்ஜ் ஃபெலோவாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது, இனி அவர் ஹார்டி போல், கேம்பிரிட்ஜில் ஆராய்ச்சிகள் செய்யலாம். மாதச் சம்பளம் உண்டு. பிற மாணவர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருக்கலாம்.

ஆனால் அப்படி எதையும் அவரால் செய்யமுடியவில்லை. உடல்நிலை அதற்கு இடம் தரவில்லை. அதற்குள்ளாக முதல் உலகப்போர் முடிந்திருந்ததால், மார்ச் 1919-ல் கப்பலில் ஏற்றி அவரை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டனர்.

1917-ல் தொடங்கிய வியாதி அவரைத் தொடர்ந்து பீடித்தபடி இருந்தாலும் படுத்த படுக்கையாக இருந்தபடியே அவர் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். இறுதியாக 26 ஏப்ரல் 1920 அன்று சென்னை சேத்துப்பட்டில் தான் வசித்த வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 33-தான்.

ராமானுஜனின் தனி வாழ்வு மிகவும் சோகமாகவே இருந்தது. இந்தியாவில் இருந்ததவரை அவர் மனைவியுடன் சேர்ந்து வாழவில்லை. மனைவியோ சிறுமி. வீட்டில் பெரும்பாலும் ஏழைமைதான். அவர் மிக மகிழ்ச்சியாக இருந்தது சென்னைத் துறைமுகத்தில் வேலை பெற்றபோதுதான். பின்னர் இங்கிலாந்து சென்றதும் முதல் உலகப்போர் தொல்லை. அப்படியும் அவர் மிகச் சிறப்பாகத் தன் ஆராய்ச்சிகளைச் செய்யத் தொடங்கியிருந்தார். ஆனால் விரைவில் உடல் நலக்கோளாறு.

இந்தச் சில ஆண்டுகளுக்குள்ளாக அவர் செய்துவிட்டுப் போயிருப்பவை இன்று உலகின் பல முன்னணி கணித விற்பன்னர்களைத் தூக்கமிழக்கச் செய்துவருகிறது.
தொலைந்த நோட்டுப் புத்தகங்களும் கரைந்த மேதைமையும்

தன் 33-வது வயதில் இறந்துபோன ஸ்ரீநிவாச ராமானுஜன் தன் வாழ்நாளில் என்னதான் சாதித்தார்? எதன் அடிப்படையில் நாம் அவரைக் கணிதமேதை என்று கொண்டாடுகிறோம்? அல்லது பொதுவாக, ‘வெள்ளைக்காரனே சொல்லிட்டான்!’ என்ற அடிப்படையில் அவரை மேதையாக்கி, படம் வைத்து, பூ மாலை சார்த்தி பூஜிக்கத் தொடங்கிவிடுகிறோமா?

முதலில் ராமானுஜனின் கல்வியைப் பற்றிப் பார்ப்போம். ராமானுஜனுக்கு அடிப்படைக் கணிதக் கல்வி என்பது சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கவில்லை. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, நம் பள்ளிக்கூடக் கணிதம் உசத்தியான பாடத்திட்டமாக இருப்பதில்லை. அதுவும் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் என்ன இருந்திருக்க முடியும்? கொஞ்சம் அல்ஜீப்ரா, கொஞ்சம் டிரிக்னாமெட்ரி (முக்கோணவியல்). கால்குலஸ் எனப்படும் நுண்கணிதம்கூட பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, அதிர்ஷ்டவசமாக, ராமானுஜனுக்கு லோனியின் ‘பிளேன் டிரிக்னாமெட்ரி’ என்ற புத்தகம் கிடைத்தது. உங்கள் கையருகே இந்தப் புத்தகம் இருந்தால் திறந்து பாருங்கள். நான் இதனைச் சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியின்போது தெருவோரத்தில் ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கினேன். இதில் டிரிக்னாமெட்ரியைத் தாண்டி மேலும் பல விஷயங்கள் உள்ளன. ஹை ஸ்கூல் படிக்கும்போதே இந்தப் புத்தகத்தை ராமானுஜன் கரைத்துக் குடிந்திருந்தார்.

பின்னர் ராமானுஜனுக்குக் கிடைத்தது ஜி.எஸ்.கார் எழுதிய ‘சினாப்சிஸ்’ என்ற புத்தகம். இது கல்லூரிக்கான நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மனப்பாடம் செய்ய வசதியான, கணிதச் சூத்திரங்கள் மட்டுமே அடங்கிய ஒரு புத்தகம். இதில் செய்முறை இருக்காது. ஏன் இந்தச் சூத்திரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது என்ற பின்னணி இருக்காது. ஆனால் அந்தக் காலத்தில் கல்லூரி நிலைக் கணிதம் என்று சொல்லப்படும் அனைத்தும் அப்படியே சாறு பிழியப்பட்டு அங்கே கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்தப் புத்தகம்தான் ராமானுஜனை ஒரு படி மேலே தூக்கிச் சென்றிருக்கவேண்டும் என்று அனைத்து நிபுணர்களும் கருதுகிறார்கள். ஓரளவுக்கு அடிப்படைக் கணிதம் தெரிந்திருந்த காரணத்தால், மீதியை இந்தச் சூத்திரங்களின் அடிப்படையில் ராமானுஜன் தானாகவே ‘டிரைவ்’ செய்து பார்த்திருக்கவேண்டும். அதாவது ஒரு கணிதச் சமன்பாட்டைப் பார்த்ததும் அது இப்படித்தான் வந்திருக்கவேண்டும் என்று யாருமே சொல்லித்தராமல் ராமானுஜன் தானாகவே அதன் ‘உண்மையை’ தருவித்துக்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் இதுமட்டும் போதுமா ஒரு மனிதன் கணித மேதையாக?

அடுத்த கட்டமாக ராமானுஜனுக்கு ஒரு பெரிய ‘லக்கி பிரேக்’ கிடைத்தது. கும்பகோணம் கல்லுரியில் அவரை ஃபெயில் ஆக்கிவிட்டனர். அதன் விளைவாக அவர் சென்னை வந்து சேர்ந்தார். இது அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பம்.

இங்குதான் அவர் ஓரளவுக்கு உயர் கணிதத்தில் பயிற்சி பெற்றவர்களைச் சந்திக்க ஆரம்பித்தார். பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் சிங்காரவேலு முதலியார் மிக முக்கியமான தொடர்பாகிறார். அவர்மூலம் ராமானுஜனுக்கு ஏராளமான கணிதப் புத்தகங்கள் கிடைத்திருக்கவேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகம் ராமானுஜனுக்கு நிச்சயமாக உதவியிருக்கவேண்டும். மிகத் தெளிவான தகவல்கள் கிடைக்காவிட்டாலும் ஓரளவுக்குச் சில தகவல்கள் கிடைத்துள்ளன. ராமானுஜன் நிச்சயமாக ஏ.எல். பேக்கர் எழுதிய ‘எல்லிப்டிக் ஃபங்க்ஷன்’ என்ற புத்தகத்தைப் படித்திருக்கவேண்டும் என்கிறார் புரூஸ் பெர்ண்ட் என்ற அமெரிக்க கணிதப் பேராசிரியர். கூடவே கிரீன்ஹில் எழுதிய ‘தி அப்ளிகேஷன்ஸ் ஆஃப் எல்லிப்டிக் ஃபங்க்ஷன்ஸ்’ என்ற புத்தகத்தையும் ராமானுஜன் படித்திருக்கவேண்டும் என்றும் யூகிக்க முடிகிறது. இந்தப் புத்தகங்கள் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் அப்போது இருந்தன என்றும் தெரியவருகிறது.

இந்தப் புத்தகங்கள் உயர் கணித ஆராய்ச்சிகளை நோக்கி ராமானுஜனை இழுத்துச் சென்றன.

கணித ஆராய்ச்சிகளை எப்படிச் செய்வது என்று வழிகாட்ட யாரும் இல்லையென்றாலும் சரியான பாதையை நோக்கிச் செல்வது எப்படி என்று தானாகவே ராமானுஜன் கண்டுபிடித்திருக்கவேண்டும்.

இந்தக் காலகட்டத்தின்போதுதான் ராமானுஜன் தன் நோட்டுப் புத்தகங்களில் சில குறிப்புகளை எழுதத் தொடங்கினார். அவை பெரும்பாலும் முடிவுபெற்ற சூத்திரங்களாக, சமன்பாடுகளாக இருந்தன. ஒரு சிலேட்டில் குச்சியை வைத்துக் கணக்கு போட்டுவிட்டு, இறுதி முடிவை மட்டும் தன் நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொள்ளத் தொடங்கினார் ராமானுஜன். இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று: ஜி.எஸ்.கார் புத்தகத்தில் அப்படித்தான் முடிவுகள் இருந்தன. நிரூபணங்கள் கிடையாது. வெறும் முடிவுகள் மட்டுமே. இரண்டாவது, பண விவகாரம். ராமானுஜன் இந்தக் கட்டத்தில் கையில் பணமே இல்லாதவராக, தன் சாப்பாட்டுக்கு எப்படியாவது வழி தேடுபவராக இருந்தார். தொடர்ந்து கல்லூரித் தேர்வில் ஃபெயில் ஆகிக்கொண்டிருந்தார். ட்யூஷன் எடுத்துச் சம்பாதித்தார். அதுவும் தொடர்ந்து பணம் தரவிவில்லை. ஒருவிதமான யாசகத்தால்தான் அவரது வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது. அப்படி இருக்கும்போது வேண்டிய அளவு காகிதம் வாங்க அவரிடம் பணம் இருந்திருக்கமுடியாது.

1907-ல் வி. ராமசாமி ஐயர் என்பவர் பூனா நகரில் ‘அனலிடிக் கிளப்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இது 1910-ல் இந்தியன் மேத்தமேடிகல் சொசைட்டி என்று பெயர் மாற்றம் பெற்றது. அது ‘தி ஜர்னல் ஆஃப் இந்தியன் மேத்தமேடிகல் சொசைட்டி’ என்ற ஆய்விதழை வெளியிட ஆரம்பித்தது. இந்த ஆய்விதழ் ராமானுஜனுக்குப் பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த ஆய்விதழில் ராமானுஜன் பல கணிதப் புதிர்களை வெளியிட்டதோடு, பிறர் வெளியிடும் கணிதப் புதிர்களையும் விரைவாக விடுவித்தார். அத்துடன் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிடத் தொடங்கினார். 1911-ல் ‘பெர்னோலி எண்களின் சில குணாதிசயங்கள்’ என்ற ஆய்வுக் கட்டுரையை இந்த இதழில் வெளியிட்டார். ஆக, இந்தக் கட்டத்தில் ராமானுஜனுக்கு கணித ஆய்வுக் கட்டுரைகளை எழுதக்கூடிய திறன் வந்துவிட்டது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். மேலும் நம்பர் தியரி, கால்குலஸ் போன்ற பகுதிகளில் ராமானுஜனுக்கு மிக நல்ல புரிதல் வந்திருந்தது என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

சென்னைத் துறைமுகத்தில் வேலைக்குச் சேர்ந்தவுடன் ராமானுஜனுக்கு நாரயண ஐயருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. நாராயண ஐயர் ராமனுஜனின் மேலதிகாரி என்றாலும் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகவே இருந்தனர். நாராயண ஐயர் கணிதத்தில் பட்டம் பெற்றதோடு மட்டுமின்றி, ஜர்னல் ஆஃப் இந்தியன் மேத்தமேடிகல் சொசைட்டி இதழுக்குக் கணிதப் புதிர்களையும் அனுப்பிவந்தார். அந்தக் கட்டத்தில் இந்தியாவிலேயே கணிதத்தில் மிக அதிகமாகப் படித்தவர்கள் என்று பார்த்தால் நூறு பேர்களுக்கு உள்ளாக இருக்கும். அதில் ஒருவரான நாராயண ஐயர் ராமானுஜனின் நண்பராக வந்து சேர்ந்தது ராமானுஜனின் அதிர்ஷ்டமே.

மேலும் அந்தக் காலத்தில் கணித ஆராய்ச்சி என்றால் இந்தியாவில் மொத்தம் மூன்று இடங்கள்தான் இருந்திருக்க முடியும். கொல்கத்தா, மும்பை, சென்னை. அதில் சென்னையில்தான் முதல் பொறியியல் கல்லூரி நிர்மாணிக்கப்பட்டு உயர் கணிதம் தெரிந்த பேராசிரியர்கள் வேலையில் இருந்தனர். சென்னைத் துறைமுகத்தின் தலைவரான சர் ஃப்ரான்சிஸ் ஸ்பிரிங் என்பவரே பொறியியல் மாணவர். அவரது ஆசிரியர்தான் கிண்டியின் உள்ள பொறியியல் கல்லூரியில் வேலை செய்துவந்தார்.

இந்த உறவுகளின் அடிப்படையில்தான் ராமானுஜன் சரமாரியாகக் கடிதங்கள் எழுதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடி கல்லூரி ஃபெல்லோவான ஜி.எச். ஹார்டியின் கண்களைச் சென்றடைந்தார்.

கேம்பிரிட்ஜ் செல்வதற்குமுன்னரேயே கணிதத்தில் தானாகவே நன்கு தேர்ச்சி அடைந்திருந்தாலும் கேம்பிரிட்ஜில் முதல் வருடத்தில் தன்னிடம் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றையும் ராமானுஜன் களைந்தார். உயர் கணித ஆராய்ச்சி என்றால் என்ன, எப்படி அதனை அணுகவேண்டும், எங்கெல்லாம் புதைகுழிகள் உள்ளன, அவற்றிலிருந்து எப்படித் தப்பிப்பது போன்ற அனைத்தும் இந்தக் கட்டத்தில்தான் ராமானுஜனுக்குத் தெரியவந்தன. அதே சமயம், ‘ரிகர்’ என்ற கணித வரைமுறைக்குள் முற்றிலுமாகச் சிக்கிக்கொள்ளாமல் கிரியேடிவிடி என்ற படைப்புத்தன்மை சற்றும் குறையாமல் பார்த்துக்கொண்டது ராமானுஜனின் அதிர்ஷ்டமே.

முதல் உலகப்போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தாலும் ராமானுஜனும் ஹார்டியும் சேர்ந்து 1915, 1916 ஆண்டுகளில் செய்த சாதனைகள் ஏராளம். வரிசையாகப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்த ஆண்டுகளில் ராமானுஜன் வெளியிட்டார். முனைவர் பட்டம் கிடைத்தது. டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோ, ராயல் சொசைட்டி ஃபெல்லோ போன்ற பதவிகள் கிடைத்தன.

ஆனால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட, தன் வாழ்நாள் இனி சொற்பம்தான் என்பதை ராமானுஜன் புரிந்துகொண்டார். எனவே முன்னைவிடக் கடுமையாக உணவு, நீரையும் மறந்து ஆராய்ச்சியில் இறங்கினார்.

ராமானுஜனின் நோட்டுப் புத்தகங்கள் பற்றிச் சற்றே பார்ப்போம். இந்தியா வந்தபின்னும் தொடர்ந்து தன் ஆராய்ச்சிகளைக் கடித வடிவில் ஹார்டிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார் ராமானுஜன். அவர் இறந்தபின், அவரது ஆராய்ச்சிகளை மொத்தமாகத் தொகுத்து, எடிட் செய்து, அவற்றை வெளியிடவேண்டும் என்று ஹார்டி விரும்பினார். வாட்சன், வில்சன் என்ற இரண்டு பிரிட்டிஷ் பேராசிரியர்கள் இந்தப் பணியில் இறங்கினார்கள். வில்சன் துரதிர்ஷ்டவசமாக விரைவிலேயே இறந்துபோனார். வாட்சன் மட்டும் தொடர்ந்து இந்தப் பணியில் ஈடுபட்டார். அப்போது ராமானுஜனின் இரண்டு நோட்டுப் புத்தகங்கள் மட்டும்தான் ராமானுஜனது எஞ்சியுள்ள ஆராய்ச்சிகள் என்று கருதப்பட்டிருந்தது.

இந்த இரண்டு புத்தகங்களையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். வீணாகிப்போய்விடக்கூடாதே என்று ஒவ்வொரு பக்கத்தையும் லாமினேட் செய்துள்ளனர். ஆனால் அதன் காரணமாகவே இது விரைவில் வீணாகிவிடும் என்று தெரிகிறது. இந்த நோட்டுப் புத்தகங்களை மும்பையில் உள்ள டி.ஐ.எஃப்.ஆர் ஸ்கேன் செய்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர்.

வாட்சன் இந்த இரு நோட்டுப் புத்தகங்களையும் எடிட் செய்யும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சோர்வு காரணமாகவும் வயதான காரணத்தாலும் மேற்கொண்டு ஆராயாமல் அவற்றைக் கைவிட்டிருந்தார். பின் அவர் இறந்துவிட்டார்.

ஹார்டியிடம் ஆராய்ச்சி செய்த கடைசி மாணவரான ராங்கின், வாட்சனின் மனைவியிடம் பேசி, அவரிடம் இருந்த கையெழுத்துப் பிரதிகள், துண்டுக் காகிதங்கள் ஆகியவற்றைப் பெற்று அவற்றை கேம்பிரிட்ஜின் டிரினிடி கல்லூரி நூலகத்தில் கொடுத்தார். அவர்கள் அதனை கேடலாக் செய்துவைத்திருந்தனர்.

அமெரிக்காவின் ஜார்ஜ் ஆண்டிரூஸ் என்ற பேராசிரியர் ராமானுஜனின் கணிதத்தில் ஆராய்ச்சியைத் தொடங்கினார். டி.ஐ.எஃப்.ஆர் வெளியிட்ட நோட்டுப் புத்தகங்களிலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்கிய அவர், வாட்சன் என்னதான் செய்திருந்தார் என்பதைத் தெரிந்துகொள்ள டிரினிடி கல்லூரியின் நூலகத்துக்குச் சென்றார். அங்கே வாட்சனின் காகிதங்கள் என்று அவர்கள் வைத்திருந்த கட்டுக்குள் தோண்டித் துருவியபோது ராமானுஜன் கைப்பட எழுதிய மேலும் சில காகிதங்கள் கிடைத்தன. அதுநாள்வரை யாருக்குமே தெரிந்திராத ஒரு விஷயம் இது. சொல்லப்போனால் வாட்சனுமே அந்தக் காகிதங்களைப் பார்வையிட்டிருக்கவில்லை.

ராமானுஜன் இறந்தவுடன் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து யாரோ இரண்டு பேர் வந்து ராமானுஜனின் காகிதங்களையெல்லாம் சேகரித்து அவற்றை ஹார்டிக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். ஹார்டி அதற்குள் போக விரும்பாமல் அந்தக் கட்டை அப்படியே வாட்சனிடம் கொடுத்திருக்கிறார். வாட்சன் அவற்றுக்குள் புகாமல் அப்படியே விட்டுச் சென்றிருக்கிறார். இபோது ஆண்டிரூஸ் கையில் அவை சிக்கின. இதனை ஆண்டிரூஸ் ‘ராமானுஜனின் தொலைந்த நோட்டுப் புத்தகம்’ என்று பெயரிட்டு அழைத்தார்.

ஆண்டிரூஸை அடுத்து அமெரிக்கக் கணிதப் பேராசிரியர் புரூஸ் பெர்ண்டும் ராமானுஜன் ஆராய்ச்சியில் இறங்கினார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு முடிவு செய்தனர். ராமானுஜனின் இரண்டு நோட்டுப் புத்தகங்கள், தொலைந்த நோட்டுப் புத்தகம் ஆகிய மூன்றையும் எடுத்துக்கொண்டு, அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு சமன்பாட்டையும் கேள்விக்கு உட்படுத்தவேண்டும். அவை சரியா என்று பார்க்கவேண்டும். சரி என்றால் நிரூபிக்கவேண்டும். இல்லை என்றால் எங்கே தவறு என்று சொல்லவேண்டும். தவறைச் சரி செய்யமுடியுமா என்றால் முயலவேண்டும். இவற்றைத் தொகுத்துப் புத்தகங்களாகக் கொண்டுவரவேண்டும்.

இப்படி ஆரம்பித்த ஆராய்ச்சியில் இன்று கிட்டத்தட்ட 90% முடித்துவிட்டனர். கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட கணித முடிவுகள் இந்த நோட்டுப் புத்தகங்களில் உள்ளன என்கிறார் பெர்ண்ட். அவற்றில் பத்துக்கும் குறைவானவையே தவறான முடிவுகள் என்கிறார் அவர். இந்த அளவுக்கு சக்சஸ் ரேட் கணிதத் துறையில் சாத்தியமே இல்லை என்கிறார் அவர்.

ராமானுஜனின் ஆராய்ச்சிகளுக்கும் பிறரது ஆராய்ச்சிகளுக்கும் என்ன வித்தியாசம் என்று நான் அவரிடம் கேட்டேன். பிறர் ஆராய்ச்சி செய்தால் மேற்கொண்டு அதில் செய்வதற்கு ஒன்றுமே இல்லாமல் மூடிவைத்துவிடுவார்கள்; ஆனால் ராமானுஜன் ஒரு நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பல அற்புதமான வைரங்களைத் தோண்டி எடுத்தபடியே சென்றுள்ளார்; அவர் பின்னால் நாங்கள் அனைவரும் சென்று அவர் தோண்டி எடுக்காத முத்துக்களைத் தோண்டி எடுக்கிறோம் என்கிறார் பெர்ண்ட். அந்த அளவுக்கு விரிவான ஒரு வீச்சு ராமானுஜனிடம் இருந்தது. அதே நேரம் புதிதாக வரும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் மேலும் செய்வதற்கும் இடமும் இருந்தது.

ராமானுஜனைப் பற்றி எழுதும்போது ஒருவரைக் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. அவர்தான் பி.கே.சீனிவாசன். விரிவாகிவிடும் என்று அஞ்சிக் குறைவாகவே முடித்துக்கொள்கிறேன். பள்ளி ஆசிரியரான இவர் மட்டும் இல்லை என்றால் ராமானுஜன் பற்றிய துண்டுத் துணுக்குக் காகிதங்கள், படங்கள் போன்ற எவையுமே நமக்குக் கிடைத்திருக்காது. அதேபோல குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றவர் ராபர்ட் கனீகெல். ராமானுஜனின் முழுமையான வாழ்க்கை வரலாறை எழுதி நம் நாட்டவர்க்கே ராமானுஜனைப் பற்றி அறிமுகம் செய்தவர். அதன்பின் பேராசிரியர்கள் ஆண்டிரூஸ், பெர்ண்ட். அவர்கள் இல்லாவிட்டால் இன்று ராமானுஜனின் சாதனைகள் உலகில் யாருக்குமே தெரியாது. அதற்குமுன் ஹார்டி, லிட்டில்வுட். இவர்கள் இருவரும் இல்லாவிட்டால் ராமானுஜன் வெளியுலகுக்கு வந்திருக்க முடியாது.
இவர்கள் அனைவருக்கும் நமது வந்தனங்கள். நன்றி பத்ரி சார் .....






மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (1869 - 1948)

Mahatma Mohandas Karamchand Gandhi
இந்தியாவின் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் தலை சிறந்த தலைவராக விளங்கியவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆவார். இந்தக் காரணத்தாலேயே, இவரை இந் நூலின் மூலப் பகுதியில் சேர்க்க வேண்டும் என்று மிகப் பலர் வலியுறுத்தினார்கள். ஆனால், இங்கிலாந்து வல்லரசின் ஆதிக்கத்திலிருந்து இந்தியாவுக்கு விடுதலை, முன்னரோ பின்னரோ கட்டாயமாகக் கிடைத்துவிடக்கூடிய நிலை இருந்தது. குடியேற்ற ஆதிக்க முறையை ஒழித்துக்கட்டும் வகையில் வரலாற்றுக் சக்திகள் வலுவுடன் முன்னேறிக்கொண்டு வந்ததை நோக்கும் போது காந்தி தோன்றியிராதிருந்தால் கூட 1947-இல் இல்லாவிட்டாலும் அதற்குச் சில ஆண்டுகளுக்குள்ளேயே இந்தியா உறுதியாக விடுதலையடைந்திருக்கும் என்று கூறலாம்.
அன்பை அடிப்படையாகப் கொண்டு, பகைவனையும் நேசித்து வன்முறையை அறவே விட்டொழித்துக் கொடுமைகளை அப்புறப்படுத்துவதற்கு காந்தி கையாண்ட சத்தியாக்கிரகம் என்னும் அறப்போர் முறை இந்தியாவை விட்டு வெள்ளையரை வெளியேற்றுவதில் இறுதியில் வெற்றி கண்டது என்பது உண்மைதான் எனினும், இதற்குப் பதிலாக இன்னும் சற்றுக் கடுமையான முறைகளை இந்தியர்கள் கையாண்டிருந்தால் இந்தியாவுக்கு இன்னும் முன்னதாகவே சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று சிலர் கூறுவர். மொத்தத்தில், இந்தியாவின் விடுதலையை காந்தி விரைவுபடுத்தினாரா என்பதை உறதியாகக் கூறுவது கடினம் எனினும், (அந்த வகையிலாயினும்) காந்தி நடவடிக்கையின் நிகர விளைவு சிறிதே என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. தவிரவும் இந்திய விடுதலை இயக்கத்தைக் தோற்றுவித்தவர் காந்தி அன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. (இந்திய தேசியக் காங்கிரசுக் கட்சி 1885 ஆம் ஆண்டிலேயே தொடங்கப் பெற்றுவிட்டது) மேலும், இந்தியா இறுதியாக விடுதலையடைந்தபோது காந்தி மட்டுமே முக்கியமான அரசியல் தலைவராக இருக்கவில்லை.
எனினும் காந்தியின் தலையாய முக்கியத்துவம் அவர் வலியுறுத்திய அகிம்சைக் கொள்கையையே சார்ந்திருக்கிறது எனச் சிலர் கூறுவர். (அவரது கொள்கைகள் முற்றிலும் அவருக்கே சொந்தமானவை அல்ல. தோரோ, டால்ஸ்‘டஸ் விவிலியத்தின் புதிய ஏற்பாடு, பல்வேறு இந்து வேத நூல்கள் ஆகியவற்றிலிருந்து தமது கொள்கைகளைத் தாம் பெற்றதாக காந்தி கூறியிருக்கிறார்.) காந்தியின் கொள்கைகள் உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், அவை உலகை அடியோடு மாற்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், தீவினைப் பயனாக, அவரது கொள்கைகள் இந்தியாவில் கூடப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
கோவாவிலிருந்து போர்ச்சுகீசியரை வெளியேற்றுவதற்கு 1954-55 இல் காந்தியின் அறப்போர் முறைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இயக்கம் தன்குறிக்கோளை எட்டுவதில் வெற்றி பெறவில்லை. அதனால் சில ஆண்டுகளுக்கு பிறகு (1962) இந்திய அரசு ஓர் இராணுவப் படையெடுப்பு மூலமாகக் கோவாவை விடுவித்தது. அது மட்டுமின்றி கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா, பாகிஸ்தானுடன் மூன்று முறை போர் புரிந்துள்ளது. சீனாவுடன் ஓர் எல்லைப் போரில் இந்தியா ஈடுபட்டது. காந்தியின் முறைகளைக் கையாள மற்ற நாடுகளும் தயங்குகின்றன. காந்தி தமது அறப்போர் முறையைத் தொடங்கிய பின்பு ஏறத்தாழ 70 ஆண்டுகளில், இவ்வுலகம், வரலாறு கண்டிராத இரத்தக் களரிமிக்க இருபெருங் கொடிய போர்களைக் கண்டிருக்கிறது.
அப்படியானால், ஒரு தத்துவஞானி என்ற முறையில் காந்தியைத் தோல்வி கண்டவர் என்ற முடிவுக்கு வரலாமா? தற்போதைக்கு அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆயினும் இயேசு கிறிஸ்துவின் இறப்புக்கு 30 ஆண்டுகளுக்குப் பின்பு விவேகமும் கல்வியறிவும் வாய்ந்த ஓர் ரோமானியன் நாசரேத்தின் இயேசுவை - அவரைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்திருப்பானேயாகில் - ஒரு தோல்வியாளர் என்றே ஐயத்திற்கிடமின்றி முடிவு கட்டியிருப்பான் என்பதை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும். அத்துடன், கன்ஃபூசியஸ் எத்துணையளவுக்குச் செல்வாக்குப் பெறுவார் என்பதை கி.மு. 450 ஆம் ஆண்டில் யாரும் ஊகித்திருக்க முடியாது. எனினும், இதுகாறும் நிகழ்ந்தவற்றைக் கொண்டு மதிப்பிடும் போது இந்த நூலில் பெருமைக்குரிய ஒரு சிறப்புக் குறிப்புக்கு மட்டுமே காந்தி உரிமையுடையவர் எனத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H