ஒரு பல்கலையாவது மேம்பட்ட ஆராய்ச்சிக்காக முன்வர வேண்டும்: ஜனாதிபதி:
உலகின் சிறந்த 200 பல்கலைகளின் பட்டியலில், ஒரு இந்தியப் பல்கலைக்கழகம்
கூட இடம்பெறாதது வேதனைக்குரியது. எனவே, குறைந்தபட்சம் ஒரு இந்திய
பல்கலையாவது, மேம்பட்ட ஆராய்ச்சிக்காக முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி
பிராணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர்
நகரிலுள்ள லவ்லி புரபஷனல் பல்கலைக்கழகத்தின் 3வது வருடாந்திர பட்டமளிப்பு
விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், ஜனாதிபதி இதைக் கூறினார்.
அவர் மேலும் பேசியதாவது: 40 ஆயிரம் மாணவர்களை கையாளும் வகையில்
சிறப்பான தொழில்நுட்பத்தை பயன்படுத்திய எல்.பி.யூ., பல்கலையை, கட்டாயம்
பாராட்டியே ஆக வேண்டும். மேலும், கல்வியால், இளைஞர்களின் மனதை மாற்ற
முடியும்.
ஒரு சமூகம் பெண்களை மதிக்கவில்லை என்றால், அது முன்னேற முடியாது என்பதை
சிந்திக்க வேண்டிய நேரமிது. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 1 கோடியே 20 லட்சம்
இந்தியர்கள், உலகின் பணியாளர் எண்ணிக்கையில் புதிதாக இணைகிறார்கள். வரும்
2020ம் ஆண்டில், உலகப் பணியாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர்,
இந்தியாவில் இருப்பார்கள். உற்பத்தி வளம் என்பது, உண்மையிலேயே ஒரு சிறந்த
வளமாகும். பணிக்குத் தேவையான திறன்களை நாம் வழங்கவில்லை என்றால்,
எதிர்காலத்தில் மிகுந்த சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்தியாவில் ஒரு காலத்தில் செயல்பட்ட, உலகின் பழமையான
பல்கலைக்கழகங்களான, நாளந்தா மற்றும் தட்சசீலா போன்றவை, உலகெங்கிலும்
இருந்து, மாணவர்களை ஈர்த்தன. இந்தப் பல்கலைக்கழகங்கள், 1000 ஆண்டுகளுக்கும்
மேலாக, மாணவர்களுக்கு, கல்விச் சேவை புரிந்தன. ஆனால் தற்போதைய நிலையில்,
உலகின் சிறந்த 200 பல்கலைகளின் பட்டியலில், ஒரு இந்தியப் பல்கலைக்கழகம் கூட
இடம்பெறாதது வேதனைக்குரியது.
ஒரிஜினல் ஆராய்ச்சித் துறையில் நோபல் பரிசுபெற நாம் 83 ஆண்டுகள்
காத்திருக்க வேண்டியதாயிற்று. நோபல் பரிசுபெற்ற சில பிரபலங்கள்,
இந்தியாவைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும், அவர்கள் பணிபுரிவது வெளிநாட்டுப்
பல்கலைகளில். குறைந்தபட்சம், ஒரு இந்தியப் பல்கலைக்கழகமாவது, ஆராய்ச்சி
மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் சிறப்பாக செயலாற்ற முன்வர வேண்டும்.
உயர்கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினை உள்ளது என்பதை
நான் அறிவேன். அதேசமயம், e - class room மற்றும் சிறந்த பேராசிரியர்களை
பரிமாறிக் கொள்ளல்(exchange programme) போன்ற வசதிகளை நாம்
பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புத்தாக்க சிந்தனைகள், இந்த நேரத்திற்கு
தேவையான ஒன்று என்று பலவிதமான கருத்துக்களைப் பேசிய அவர், மாணவர்களின்
உள்ளத்தில், கொள்கை மற்றும் மேன்மைக்கான ஒளி ஏற்றப்பட வேண்டும் என்றும்
தனது ஆவலை வெளிப்படுத்தினார்.
ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் கூறியது என்ன?
இதே விழாவில் கலந்துகொண்டு, இப்பல்கலையின் முதல் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் ஆற்றிய உரை;
"விஸ்தாரமாக அமையப்பெற்று, சிறப்பான உயர்கல்வி சேவைப் புரிந்துவரும்
இப்பல்கலைக்கு எனது வாழ்த்துக்கள். இப்பல்கலையின் முதல் கவுரவ டாக்டர்
பட்டத்தை எனக்கு வழங்கி சிறப்பித்தமைக்கு நன்றி. அளவில் பெரிதாக வளர்வதில்
மட்டுமின்றி, கல்வித்தரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய அம்சங்களிலும்
சிறந்து விளங்கும் சில பல்கலைக்கழகங்களில், இந்த லவ்லி புரபஷனல் பல்கலையும்
ஒன்று.
ஆப்கானிஸ்தானில், உயர்கல்வி வளர்ச்சி மிகவும் பின்னடைந்து இருப்பதை
நினைத்தால், மிகவும் வருத்தமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் அரசிடமிருந்து
உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு, இப்பல்கலையில் உயர்கல்வி வழங்கப்படும்
என்று இதன் வேந்தர் அறிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும், ஆப்கானுக்கும் இடையே சிறப்பான உறவு உள்ளது. ஆப்கன்
இளைஞர்களின் வளர்ச்சிக்கு, இந்தியா நிறைய செய்துள்ளது. இந்தியாவில்
படிப்பதற்காக, 2000க்கும் மேற்பட்ட ஆப்கன் மாணவர்களுக்கு, இந்தியா
உதவித்தொகை வழங்கியுள்ளது.
இந்திய மாணவர்களாகிய நீங்கள், இந்தியாவின் குடிமக்களாகவும், உலகின்
குடிமக்களாகவும் இருக்கிறீர்கள். பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சமூக
மேம்பாடு ஆகியவற்றில், வெகுவிரைவாக வளர்ந்துவரும் ஒரு நாட்டை சேர்ந்தவர்கள்
நீங்கள். உங்களின் இருப்பு, அனைத்து இடங்களிலும் உணரப்படுகிறது. எனவே,
நீங்கள் தொடர்ந்து முன்னேறும் அதே சமயத்தில், உங்களின் கலாச்சாரத்தை
மறவாமல், நாட்டின் முன்னேறத்திற்கு பாடுபடவும் தவறக்கூடாது" என்று
உரையாற்றினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...