அரசு பள்ளிகளிலும் கடமையை தவறாமல் செய்யும் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கு, ஆசிரியை சசிகலா தேவி ஒரு எடுத்துக்காட்டு.
இவர், கடந்த 8 ஆண்டுகளாக ஒரு நாள்
கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வதோடு, தன் துறையில் சிறந்த
தேர்ச்சி விகிதத்தையும் தக்க வைத்து, அசத்தலான சாதனை படைத்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சேர்ந்த இவர் 2004ம் ஆண்டு முதல்
வேளச்சேரி அரசு மேல்நிலை பள்ளியில் விலங்கியல் ஆசிரியையாக பணியாற்றி
வருகிறார். தினமும் காலை 7:45 முதல் 8:00 மணிக்குள் பள்ளிக்கு வருவதை
வழக்கமாக கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஆசிரியை சசிகலா கூறியதாவது: நான் பள்ளி படிக்கும்
காலத்தில் இருந்தே விடுப்பு எடுப்பது என்பது அரிதுதான். இதை ஒரு சாதனையாக
நான் எப்போதும் கருதியது கிடையாது. கடமையாகவே நினைக்கிறேன். அதிலும், அரசு
பள்ளி ஆசிரியை என்பதால் கூடுதல் பொறுப்பு உள்ளதாக நினைக்கிறேன்.
தினமும் அதிகாலை 5:00 மணிக்கே எனக்கு நாள் பணி துவங்கிவிடும். காய்ச்சல்
வந்த போது, விபத்து நேரிட்ட போது கூட பள்ளிக்கு வந்து விட்டேன்.
உறவினர்களின் சுப நிகழ்ச்சிகள் விடுமுறை நாட்களில் வந்தால் மட்டுமே நான்
கலந்து கொள்வேன். மற்ற நாட்களில் எனக்கு பதில் கணவர் செல்வார்.
என் பணிக் காலத்தில் இதுவரை 20 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளேன்.
நான் மட்டும் இல்லை. என் மகன் அரவிந்தன், மகள் அபர்ணா ஆகியோரும்
பெரும்பாலும் விடுப்பு எடுப்பது இல்லை. நான் எடுக்கும் பாடப்பிரிவில்
அனைத்து மாணவ, மாணவியரும் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்பது
மட்டும்தான் குறிக்கோள்.
பெரும்பாலான ஆண்டுகளில், 100 சதவீத தேர்ச்சி கொடுத்துள்ளேன். மீதமுள்ள
ஒன்பது ஆண்டுகள் விடுப்பு எடுக்காமல் பள்ளி சென்று மாணவ, மாணவியர்கள்
முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்பது தான் என் லட்சியம். இவ்வாறு
ஆசிரியை சசிகலாதேவி உற்சாகத்துடன் கூறினார்.