எம்.பி.பி.எஸ். படித்தவர்களுக்கு ஊரகப் பகுதிகளில் கட்டாய சேவை கூடாது:
எம்.பி.பி.எஸ். பயின்றவர்கள் ஊரகப் பகுதிகளில்
கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என்று சமூக
சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்
ஜி.ஆர்.ரவீந்திரநாத் சென்னையில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை
பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்கள் ஓராண்டு காலமாவது ஊரகப் பகுதியில்
மருத்துவ சேவை செய்தால் தான் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர
விண்ணப்பிக்க முடியும் என்ற மத்திய அரசின் புதிய விதிமுறையை கைவிட
வேண்டும்.
அதேபோல் மூன்றாண்டு மருத்துவப் படிப்புத் திட்டத்தையும் மத்திய அரசு
கைவிட வேண்டும். இந்தத் திட்டமானது கிராமப்புற மக்களையும், மாணவர்களையும்
இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிவிடும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டி.டி. மருத்துவக் கல்லூரிக்கான
அங்கீகாரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்து விட்டதால் கடந்த
ஆண்டுகளில் இக்கல்லூரியில் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர
முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இப்பிரச்னையில் தமிழக அரசு
தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசே ஏற்றுக் கொண்டதுபோல, டி.டி.
மருத்துவக் கல்லூரியையும் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றார் டாக்டர்
ரவீந்திரநாத்.