பி.எட். சேர்க்கை: கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை:
பி.எட். படிப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல்
கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர்
கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.தேசிய ஆய்வு, அங்கீகார கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற சுயநிதி
கல்லூரிகள், பி.எட். படிப்புக்கு ஆண்டுக்கு ரூ. 46,500-ம், அங்கீகாரம்
பெறாத கல்லூரிகள் ரூ. 41,500-ம் கட்டணமாக வசூலிக்க வேண்டும். எம்.எட்.
படிப்புக்கு ரூ. 47,500 கட்டணம் வசூலிக்க வேண்டும் என கட்டண நிர்ணயக் குழு
வரையறுத்துள்ளது.
இந்தக் கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணத்தை கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது.
இப்போது 2013-14- ஆம் ஆண்டுக்கான பி.எட்., சேர்க்கை நடைபெற்று வரும்
நிலையில், கல்விக் கட்டணம் குறித்து கல்லூரிகளுக்கு நினைவூட்டும் வகையில்
கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையில்
அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நிர்ணயிக்கப்பட்டுள்ள
கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைத்
தொடர்ந்து, பல்கலைக்கழகமும் இதுகுறித்து கடிதம் மூலம் இணைப்புக்
கல்லூரிகளை அறிவுறுத்தியுள்ளது.
கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டிபிடிக்கப்பட்டால், இணைப்பு
அந்தஸ்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என
பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது